30/12/2017

திடீர் அதிரடி அரக்க பறக்க ஓட்டம் வீட்டுக் கதவை தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்...


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்; அந்தப் பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறையில் தற்போது மேம்படுத்தி உள்ளார். ஏற்கனவே அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.

இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஊழலை அடியோடு வேரறுக்க சந்திரபாபு நாயுடு டிஜிட்டல் முறையில் புகார் தெரிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

புகார் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால் இந்த உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின.

இதையடுத்து, புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முதல்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் மேல் நடவடிக்கைக்கு பயந்து, யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று, கதவைத் தட்டி வாங்கிய பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த ஆறு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்ககள் கொட்டி அழுத பல லட்சக்கணக்கான ரூபாய் அளவிலான லஞ்சப்பணம் திரும்பி வந்து சேர்ந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.