02/02/2018

கண்மாயில் சிதறிக்கிடக்கும் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியன் காலத்து கல்வெட்டுகள்...


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாய்க்குள் சிதறிக் கிடக்கும் தூண்களில் கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அக்கல்வெட்டுக்கள் தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.

அக்கல்வெட்டுகள் 1985ல் பேரையூர் கண்மாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்பு, குமிழிமடை, செங்கமடையை உயர்த்தி கட்ட முடிவெடுத்து  கண்மாயை தோண்டியபோது, பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்தன.  குமிழிமடையில் 9, செங்கமடையில் 2 என 11 துண்டு கல்வெட்டுகள் இருந்தன. இவை 13ம் நூற்றாண்டு கால எழுத்து வடிவத்தில் உள்ளதாகவும். இதன் மூலம் இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது என்று தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அறிவோம்...

கிபி 1238 முதல் கிபி 1258 வரை மதுரையை தலைநகராக கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியின் சில பகுதிகள் இக்கல்வெட்டுகளில் இருப்பதால், இவற்றில் சில அவருடைய காலத்தை சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. கல்வெட்டுகளில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கை, இரு செவி, மும்மதம், நாற்கோட்டு என வரிசை சொற்களால் மெய்க்கீர்த்தி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டில் உத்தமபாண்டியநல்லூர், அண்டநாட்டு பெருமணலூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நின்றாடுவான் வீரசோழ தேவனான குருகுலத்தரையன், விக்கிரப்பாண்டிய உத்தர மந்திரி ஆகிய அரசு அதிகாரிகள், பாண்டியநல்லூர் பட்டர் என்ற பிராமணர், இரண்டாம் சுந்தரபாண்டியனின் பட்டத்து அரசி உலகமுழுதுடையார் ஆகியோர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெட்டிபாட்டம், பஞ்சுபீலி எனப்படும் வரிகள், ஐப்பசி குறுவை, கோடைக்குறுவை ஆகிய விவசாய பருவங்கள், பத்து மா எனும் ஒரு நிலஅளவு, திருக்காமக்கோட்டம் எனும் அம்மனுக்கான கோயில் ஆகியவை குறித்தும் கூறப்பட்டுள்ளன. கரிசல் நிலம், கருஞ்செய் என சொல்லப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறிய முடிகிறது. ஆவுடைய நாச்சியார் என்பவர் வழங்கிய தேவதானம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சமண, பவுத்த கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. பேரையூர் பேருந்து நிறுத்தம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் குழி தோண்டியபோது, புதைந்த நிலையில் சுவாமி சிலைகள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அவை அந்த கோயிலின் சிலைகளாக இருக்கலாம் என தெரிகிறது. இப்பகுதியில் இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் பல வரலாற்றுத் தகவல்கள் தெரியவரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.