20/04/2018

தாயை பிடித்து சென்றதால் வேதனை: காவல் நிலைய வளாகத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை...


பொங்கலூர் பல்லடம் அருகே குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர், காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார். நள்ளிரவு மருத்துவமனையில் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகன் அசோக்குமார் (24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டாகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் அசோக்குமார், தன் மீது சந்தேகப்படுவதாக கூறி புவனேஸ்வரி, பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் அசோக்குமாரை விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. ஆகையால், அசோக்குமாரின் தாய் தெய்வானையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதை அறிந்த அசோக்குமார், தாயை போலீசார் அடித்து விடுவார்களோ என பயந்து, நேற்று மாலை காவல் நிலைய வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குள் ஓடினார்.

இதைப்பார்த்த பெண் போலீஸ் ஒருவர், காவல் நிலையத்தின் கதவை மூட முயன்றார்.

அதற்குள், உடலில் பற்றிய தீயுடன் அசோக்குமார், காவல் நிலைய வாசலில் வந்து சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பெண் போலீஸ் செவ்வந்திக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அசோக்குமாரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.