29/04/2018

அழிவிற்கு தயாராகும் பெருந்துறை... பூமிக்குள் புதையும் கொடூர விஷம்: செத்து மடியும் ஈரோடு மக்கள்...


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, சிப்காட் அமைந்துள்ளது.

இங்கு 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு எந்த ஒரு தொழிற்சாலையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை.

ஆழ்துளை கிணறு அமைத்து சாய கழிவு நீரை பூமிக்குள் நேரடியாக விடுகின்றன. விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீக்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை.

சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர வயிறு உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர்.

ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என வேதிப்பொருட்கள் பன்மடங்கு அதிகம் உள்ளன.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது.

சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.