02/07/2018

தமிழர்களை நிம்மதியிழக்கச் செய்து பதற்றத்திலேயே வைத்திருக்க, பாஜக மோடியின் மற்றொரு திட்டமும் தயார்...


அது, பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு; பதிலாக இந்திய தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பு.

தன்னுரிமையுள்ள ஓர் அமைபை ஒழித்துக்கட்டி, அதன் அதிகாரங்ளைத் தன்னகத்தே குவித்துக்கொள்ளும் பாசிச நடவடிக்கையே இது எனக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.

பிரிட்டனில் உள்ள "University of Grand Committee of UK" என்கிற அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1956ல் உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக் குழு (UGC). மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவது.

பல்கலைக்கழங்களுக்கு ஏற்பு வழங்குதல், நிதி வழங்குதலோடு, பல்கலைக்கழகக் கல்வி மற்றும் உயர்கல்வியினைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவுமான பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது.

இதன் தலைமையகம்  டெல்லியில் உள்ளது; கிளை அலுவலகங்கள் புனே, போபால், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி நகரங்களில் செயல்படுகின்றன.

62 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது மத்திய பாஜக மோடி அரசு; அதற்கான வரைவுத் திட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என சவடாலும் அடிக்கிறார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக வரும் உயர்கல்வி ஆணையம் கல்வி தொடர்பான பணிகளை மாத்திரமே கவனிக்கும்; நிதி தொடர்பான பணிகளை இனி மனிதவளத் துறை அமைச்சகமே எடுத்துக்கொள்ளும் என்கிறது வரைவுத் திட்டம்.

இந்த வரைவுத் திட்டம் பற்றிய கருத்துக்களை வரும் ஜூலை 7ந் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம்-1956க்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றவும் மறைமுகத் திட்டம் உள்ளது மோடி அரசுக்கு,

இந்தத் தேசிய உயர்கல்வி ஆணையம் நாட்டின் ஒட்டுமொத்த உயர் கல்வி அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒற்றை அமைப்பாக இருக்கும் என்பதுதான் இதிலுள்ள அபாயம், ஆபத்து, பயங்கரம் எல்லாமும்.

ஏனெனில் கல்வியில் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு உரிமையே இல்லாமல் போய்விடும் என்பதுதான்.

ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு என்று பிடுங்கினார்கள்; கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையிலும் மருத்துவப் படிப்பை நமக்கு மறுத்தார்கள்; இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உயர்கல்வி என்ற நிலையில் மருத்துவம் மட்டிமல்ல; உயர்கல்வி என்று சொல்லக்கூடிய அனைத்துக் கல்வியுமே நமக்குக் கிடைக்காது என்பதுதான் உண்மை.

இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தத்தான் ”தேசிய உயர்கல்வி ஆணையம்” கொண்டுவரப்படுகிறது; உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடங்கி நீட் வரையான திணிப்புகள் இதற்கு முன்னுதாரணங்கள்!

இருக்கும் அமைப்பில் குறைகள் இருந்தால் அதனைக் களைதல்தானே முறை? அதை விட்டுவிட்டு பெயரை மாற்றுதல் அல்லது வேறு அமைப்பை உருவாக்குதல் எந்த வகையில் சரி?

ஊழல் அது இது என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் அவையெல்லாம் அரசியல் தலையீட்டினால்தான் ஏற்படுகின்றன. அததனால் அரசியல் தலையீட்டைத்தானே களைய வேண்டும்?

அப்படி அரசியல் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமென்றால், முழுக்க முழுக்க தன்னாட்சி உடைய வலிமையான ஓர் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழு இயங்குவதற்கு வழிவிட வேண்டும்; வழிவகை செய்ய வேண்டும்.

அதனைச் செய்யாமல் ”தேசிய உயர்கல்வி ஆணையம்” அமைப்பதென்பது, ஒற்றை அதிகார மையமாக ஒன்றிய அரசை மாற்றும் உள்நோக்கமுடையதாகும்.

பல்வேறு தேசிய இனங்களை வைத்துத்தான் டெல்லியில் மத்திய அரசு என்ற ஒன்றே இருக்க முடியும் என்பதால் ”உயர்கல்வி ஆணையம்” என்ற பெயரில் மாநிலங்களுக்கான உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை பாசிச தன்மை கொண்டது எனக் குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

எனவே தமிழர்களை நிம்மதியிழக்கச் செய்து பதற்றத்திலேயே வைத்திருக்கும் நோக்கிலான மோடியின் மற்றொரு திட்டம்தான் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலான ”தேசிய உயர்கல்வி ஆணையம்” என்று கருதுகிறோம்.

தன்னுரிமையுள்ள ஓர் அமைபை ஒழித்துக்கட்டி, அதன் அதிகாரங்ளைத் தன்னகத்தே குவித்துக்கொள்ளும் பாசிச நடவடிக்கையே இது எனக் குற்றம்சாட்டுவதுடன், இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது  தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.