31/08/2018

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்.

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும். கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும். மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.

இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே " - திருமந்திரம்

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்.

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை. ஜோதி பாதம். திருவடி.

இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.  நோய் நொடி வராது. உடல் உறுதி பெறும். உள்ளம் பண்பாடும். இறைஅருள் கிட்டும். எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான். ஜோதி தரிசனம் கிட்டும்.  திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்.

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம். பரவெளி காணலாம்.  வெட்ட வெளியில் உலாவலாம். பேரின்பம்.. பேரின்பம்..  பேரின்பமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.