05/08/2018

தொழிலாளித் தமிழன்...


இந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடு மாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.

பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக் கொண்டு  மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டு விட்டது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா,  தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.

இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.

தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.

சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.

மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.

பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.

ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.

ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.

ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.

கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய் நிலத்தை விட்டு வெளியேறினார்கள்.

வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை.. இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப் போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் தான்.

1947க்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்.

80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்.

தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.

படித்துவிட்டுஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக் கொண்டே போகிறது.

இதையெல்லாம் தாண்டி  ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்.

இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.

வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்....

வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.

ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1949ல் 'மலேயா கணபதி' 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.

அவரது தோழர் 'மலேயா வீரசேனன்' 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்.

இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக் கொல்லப்பட்டனார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த  'தில்லையாடி வள்ளியம்மை' 16வயதில் போராடி இறந்தார்.

மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000  தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.

தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் 'முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்' என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.

தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.

தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்.

மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்த போது இந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.

ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலை சீவப்பட்டு கொல்லப்பட்டாளேநம்மால் என்ன செய்ய முடிந்தது?

மலையகத் தமிழர் வெளியேறிய போது அந்தமானில் குடிவைக்க இந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடி வைக்கப்பட்டனர்.

பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.

தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழி செய்திருக்கலாம்.

வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.