10/09/2018

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


நவீன மனிதனுக்கும் அவனது மூதாதையினருக்கும் இடையேயுள்ள பிரதான வேற்றுமைகள் என்னவென்றால் அவை மனித மூதாதையர் கொண்டிராததும் நவீன மனிதன் கொண்டுள்ளதுமான நிமிர்ந்த தோற்றமும் அதீத நுண்ணறிவுமேயாகும்.

நுண்ணறிவு வளர வளர மனிதன் கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்ததோடு நாகரீகமாகவும் வாழப்பழகிக் கொண்டான். இன்று விஞ்ஞான அறிவோடு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.

நுண்ணறிவினது வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கானது கூர்ப்பில் மனித மூளையின் கனவளவு அதிகரிப்போடு நேரடியான தொடர்பைக்காட்டுவதாக உள்ளது.

Homo habilis இனத்தின் மண்டைஓட்டை ஆராய்ந்தபோது அவற்றில் மூளையின் கனவளவு வெறும் 500 – 600cm3 அளவே இருந்துள்ளது.

ஆனால் மூளையின் பருமன் பரிணாம வளர்ச்சிப்போக்கில் ஏனைய மனித மூதாதையர்களில் படிப்படியாக அதிகரித்து இன்றைய நவீன மனிதனில் அதன் கனவளவானது 1200 – 1850cm3 ஆக காணப்படுகின்றது.

இது மூளையின் பருமனில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. அந்தவகையில் மூளையின் பருமன் அதிகரிப்பு நுண்ணறிவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி நுண்ணறிவானது கூர்பினூடாக படிப்படியாக அதிகரித்திருந்தாலும் அண்மைக்காலம் வரை மனிதன் தற்போது கொண்டுள்ள பாரிய நுண்ணறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சில ஆயிரம் வருடங்களினுள்ளே மூளையின் பருமனிலே பாரிய மாற்றமெதுவும் ஏற்படாதபோதும் நுண்ணறிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான காரணத்தை அறிய பல விஞ்ஞானிகள் முற்பட்டுக் கொண்டிருக்கையில்...

‘புராதன விண்வெளி கோட்பாட்டாளர்கள்’ (Ancient Astronaut Theorists – AAT) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஆய்வாளர்கள் சிலர் பின்வருமாறு அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

எவ்வாறெனில் குறுகிய காலப்பகுதியில் மனிதன் அடைந்த இப்பாரிய நுண்ணறிவு வளர்ச்சியானது இயற்கையான பரிணாம வளர்ச்சியினூடாக ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்லவெனவும் அது மனிதனைவிட நுண்ணறிவில் அதீத வளர்ச்சியடைந்த
வேற்றுக்கிரகவாசிகளின் (extraterrestrials) தலையீட்டின் காரணமாக ஏற்பட்டதெனவும் கூறுகின்றனர்.

மனிதர்களை ஊர்வன(Reptilians) வேற்றுக்கிரகவாசிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த இனமாக கருதும் இவர்கள், நமது மூதாதையர்கள்  வேற்றுக்கிரக வாசிகளையும் அவர்களது அதிநவீன தொழிநுட்பங்களையுமே அளப்பரிய சக்தி கொண்ட கடவுளாகவும் தெய்வத் தூதுவர்களாகவும் பிழையாக கற்பித்துக் கொண்டதாக வாதாடுகின்றனர்.

ஊர்வன(Reptilians) வேற்றுக்கிரக வாசிகள்...

இவர்களே மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் வரலாற்றினையும் நெறிப்படுத்தினார்கள் எனவும் நம்புகின்றனர். அந்தவகையில் இவ்வேற்றுகிரகத்தவர்கள் பண்டைய மனிதனில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மனிதனின் உடல் ஆற்றலையும் நுண்ணறிவினையும் அதிகரிக்க முயன்றிருப்பதாக பல ஆதாரங்களையும் முன்வைக்கின்றார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.