19/11/2018

தீ வைக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள்; படுகாயமடைந்த டி.எஸ்.பி -ஆலங்குடியில் பதற்றம்...


புதுக்கோட்டையில் புயலால் ஏற்பட்ட சேதங்களை முறையாகக் கணக்கெடுக்காததால், டி.எஸ்.பி வாகனம் உட்பட 5 வாகனங்களைப் பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இந்த தாக்குதலில் டி.எஸ்.பி படுகாயம் அடைந்தார். திருச்சி மண்டல டி.ஐ.ஜி தலைமையில் காவல்துறை குவிக்கப்பட்டு உள்ளனர்.

கஜா புயலால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சரிந்தன. 50 ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை உள்ளிட்ட விளை நிலங்கள் பயிர்களுடன் முற்றிலும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில்  மீட்புப் பணிகள்  நடைபெற்று வருகிறது. பயிர்களின் சேதம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார், வி.ஏ.ஒ உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த மக்கள், கொத்தமங்கலம் பகுதியில் தங்கள் வீடுகளையும், பயிர்களையும் கணக்கெடுக்க கூறிச் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதியையும் சிறைபிடித்தனர். இதனை அடுத்து, ஆலங்குடி டி.எஸ்.பி அய்யனார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. வாக்குவாதம் முற்றியதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சிலர் டி.எஸ்.பி வாகனம் உட்பட 5 அரசு வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர். கல் வீசித் தாக்கியதில், டி.எஸ்.பி தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி மண்டல டி.ஐ.ஜி லலிதா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்குப் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

- விகடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.