26/01/2019

கிராமசபை தீர்மானம் இயற்றுங்கள் - பேராசிரியர் த. செயராமன்...


Subscribe the channel...

நாகை , தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களில் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் முதல் சுற்று ஏலத்தில் மரக்காணம் முதல் கடலூர் வரை, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகை மாவட்டம் வைதீஸ்வரன்கோவில் வரை, பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி, புஷ்பவனம் வரை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது சுற்று ஏலத்தில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை, திருப்பூண்டி, கருப்பம்புலம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகள் இரண்டாவது சுற்று  ஏலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க கொடுக்கப்பட உள்ளன.  கடற்கரைப்பகுதிகளை மக்கள் காலிசெய்ய வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். 

இவையன்றி,  இவற்றில் விடுபட்ட காவிரிப்படுகை பகுதிகள் 1860 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மூன்றாவது சுற்று ஏலத்தில் தரப்பட உள்ளன.  உங்கள் ஊரும் ஹைட்ரோகார்பன் மண்டலங்களுக்குள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானங்களை சனவரி - 26 அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஒவ்வொரு கிராமமும் கீழ்க்கண்ட அல்லது இதை ஒத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

"நம் ஊர் ____________ஒரு வேளாண் கிராமம் ஆகும். நம் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், விளைநிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ, இயற்கை எரிவாயு - எண்ணெய் , மீத்தேன், ஹைட்ரோ கார்பன்கள் எடுக்க அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் எதுவாக இருந்தாலும், எவ்வித பணிகளையும் நடத்த அனுமதி இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறது."

உங்கள் ஊர் பாதுகாப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.  உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமின்றி பிற கிராமசபைகளிலும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.  விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.

பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.