30/03/2019

பால் புகட்ட வேண்டிய குழந்தைக்கு பெற்ற தாயே மது புகட்டிய கொடூரம்...


அறந்தாங்கியில் ஒரு பெண் மது வாங்கி வந்து தானும் குடித்து விட்டு, தனது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கும் புகட்டினார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி நடாயி(42). இவர் நேற்று அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி வந்தார்.  பஸ் நிலையம் அருகே அமர்ந்து பீர் அருந்திய நடாயி, பின்னர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கும் பீரை கொடுத்தார். அந்த குழந்தையும் சிறிது குடித்தது. பின்னர் தாயும், சேயும் பஸ் நிலையம் அருகே மட்டையாகி போனார்கள். பால் புகட்ட வேண்டிய குழந்தைக்கு பெற்ற தாயே மது புகட்டி போதையில் இருவரும் மயங்கி கிடந்த  சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் குழந்தையுடன் நடாயியையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து புதுக்கோட்டை ரீகோ சைல்டு லைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.