08/09/2020

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: "நவால்னிக்கு புடின் விஷம் வைத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது" - ஜெர்மனி மிரட்டல்...



பெர்லின்: 'ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு, புதின் விஷம் வைத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஆலோசித்து வருகிறோம்' என, ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்சி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்சி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம்' என, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். ரஷ்யாவில் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'அலெக்சிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், ''ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு ரஷ்ய அதிபர் புதின் விஷம் வைத்தார் என்பதற்கு எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அலெக்ஸி நவால்னிக்கு ஏற்பட்ட நிலை குறித்து போதிய விளக்கத்தை வழங்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.