01/09/2020

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்...



தமிழில் பேசுவதைப் பார்த்துப் பகடி செய்யும் பகடியாளர்களுக்குத் தமிழைப் பற்றி முழுமையாகத் தெரியாதது மட்டுமல்ல, அவர்களுக்குப் பொதுவாக மொழியைப் பற்றிய புரிதலும் சரியாக இல்லை ; அதனால் தான் அவர்கள் அவ்வாறு பகடி செய்கிறார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் ஐயாவின் கருத்துப்படி, மொழி, உலகிலிருந்து பெற்ற தரவுகளின் வழி அறிவைக் கட்டி வளர்க்கிறது ; அது உலகிற்கு அறிவைக் காட்டி நிற்கிறது ; மொழி, அதைப்  பேசுவோருடைய இனத்தைக் காட்டி நிற்கிறது; இனத்தைக் காட்டிக் காட்டியே இனத்தவர்களை ஒன்றாகக் கட்டி நிற்கிறது ; அறிவுக் கருவியாய் இலங்கும் மொழி, மாந்த மரபணுவின் கூறாய் அமைந்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்கிறது ; அறிவையும் இனத்தையும் ஆள்கின்ற மொழி, உலகத்தை ஆள்கின்ற பொருள் உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது ; மொத்தத்தில் மாந்த வாழ்வின் அடிப்படையே மொழி தான்.

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் எண்ணிப் பார்த்தால், “ மாந்த வாழ்வு அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழி அழியக் கூடாது ; அந்த மொழி அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழிப் பயன்பாட்டிலிருந்து அவர்களுடைய மொழிச் சொற்கள் தவிர்க்கப்படக் கூடாது ” என்பது புரிய வரும்.

இனி, தமிழுக்கு வருவோம் : மீண்டும் பாவாணர் கருத்துப்படி, உலகில் தோன்றிய மாந்தகுலம் முதன்முதலாகப் பேசிய மொழி ‘தமிழ்’ ; அது, இயற்கையிலிருந்து பிறந்த ஓர் இயற்கை மொழி ; அது சற்றொப்ப ஐம்பதாயிரம் ஆண்டு பழமையான மொழி. பாவாணர் தமிழின்  சிறப்புக்களை வரிசைப் படுத்துங்கால் கீழ்க்காணும் பதினாறு சிறப்புக்களைப் பட்டியலிடுவார் : “தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை, இறைமை, மறைமை, இனிமை, தனிமை, எண்மை, ஒண்மை, அம்மை, செம்மை” ஆகியன தமிழின் சிறப்புக் கூறுகளாம்.

 ‘கா -கா ’  என்று கரைவதை ‘காக்கை ’ என்றதும் ‘கீ - கீ ’ என்று கிளத்தியதை அதாவது பேசியதைக் ‘கிளி ’ என்றும் ‘மா - மே ’ என்று  ஒலியெழுப்பியவற்றைப் பொதுப் பிரிவாக ‘மா ’ என்றதும் அவற்றுள் கருப்பாய் இருந்ததை ‘கரிமா’ என்றும் பெருவலிவும் பேரொலிப்பாடும் (கர்ச்சனை)  கொண்டதை ‘அரிமா ’ என்றும் உடம்பில் வரி தாங்கியதை ‘வரிமா ’ என்றும் பகர்ந்ததும் தமிழே என்றால் தமிழ் ஓர் இயற்கை மொழியன்றோ.

தாய் சுமந்து பிறந்த பிள்ளை வாய் திறந்து பேசும்போது அங்காந்தால் (வாய் பிளந்தால்) அகரம், ஆகாரம் (அ, ஆ) , வாய் இளித்தால் (பக்கவாட்டில் இழுத்தால்) இகரம், ஈகாரம் (இ, ஈ),  வாய் குவித்தால் உகரம், ஊகாரம் (உ,ஊ) என்றவாறு அடிப்படை ஒலிகள் பிறக்குமானால், தமிழ் ஓர் இயற்கையான முதன்மை மொழியல்லவா?

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த உலக முதன் மாந்தர்களாம் தமிழர்கள், கல்லொடு கல் தேய்த்துத் தேய்த்து பிறந்த நெருப்பை ‘தீ’ என்றனர் ; தீ தந்த ஒளியை ‘தெய் ’ என்றனர்; குமுகத்தில் அறிவொளி பாய்ச்சும் அறிவர்களைத் ‘தெய்வம்’ என்றனர். மேற்கண்ட செய்தியில்  மாந்தகுலத்தின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பான ‘நெருப்பு’ தமிழர் தம் உழைப்பில் பிறந்தது என்ற உண்மையை அறிகிறோம். ‘ஒல்’ என்று ஒலி எழுப்பியதை ‘ஓலை’ என்றும் ‘அர் ’ என்று ஒலி எழுப்பியதை ‘ அருவி ’ என்றும் அதிரொலி எழுப்பிய விலங்கினை ‘அரிமா ’ என்றும் எதிர்க்க முடியா ஒலியை எழுப்பும் தலைவனை அரசன் என்றும் நம் தமிழ் பகர்வதை எண்ணிப் பார்த்தால் எத்துணையளவிற்குத் தமிழ் கரணியம் - காரியம் சார்ந்ததும் அறிவுத் தேடல் சார்ந்ததுமான  மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஒவ்வொரு அறிவுத் தேடலில் பிறந்தவை என்பதால், தமிழ் ஓர் அறிவுப் பேழை; அறிவுச் சொத்து. அப்பெரும் சொத்தை இழக்கத் துணியும் ஓர் இனம் அறிவற்ற இனமாகிவிடுமல்லவா?

எனவே, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் ஓர் அறிவுப் பேழையே என்ற அடிப்படையில் தமிழ் ஓர் அறிவுக் களஞ்சியம். இந்தத் தமிழே ஒரு காலத்தில் கரும்பொன் (இரும்பொன் - இரும்பு), செம்பொன் (செம்பு), வெண்பொன் (வெள்ளி), மஞ்சட்பொன் (பொன் - தங்கம்), ஐம்பொன்  போன்ற பல பொன்களை (மாழைகளை - உலோகங்களை) உருக்கிப் பெருக்கியது ; இந்தத் தமிழே ஞாயிறு (தலைக் கோள்)  திங்கள் (துணைக் கோள்), செவ்வாய் (செந்நிறம் கொண்ட கோள்), அறிவன், வியாழன் (பெருங்கோள்), வெள்ளி (வெண்கோள்), காரி (கருங்கோள்) என்றவாறு கோள்களை அறிந்து வான் வெளியை அளந்தது ; இந்தத் தமிழே தென்கிழக்காசியக் கடல்கள் அனைத்தையும் அளந்து, 25-நாடுகளுக்கும் மேலானவற்றை ஆண்டது ; இந்தத் தமிழே அனைத்துலகக் கடல்கள் அனைத்தின் மீதும் மிதந்து, ஒருகாலத்தில் உலக வணிகத்தை நடத்தியது ; இந்தத் தமிழே, ஐவகை நிலம் அமைத்து ஆயிரம் வகைப் பயிர் வளர்த்து உலகிற்கு உணவீந்து உயிரூட்டியது ; இந்தத் தமிழே, ‘கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலகளவு ’ என்றும் ‘கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ’ என்றும் ‘யாதும் ஊரே ;யாவரும் கேளிர் ’ என்றும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை ’ என்றும் ‘துய்ப்போம் எனினே தப்புந பலவே ’(மிகை நுகர்வு, உலக வளங்களை  ஒழித்துவிடும்) என்றும் உலக உறவை வளர்த்தது.இப்படிப்பட்ட அருந்தமிழை இழந்துவிடுவது என்பது, தமிழர்க்கு மட்டும் இழப்பல்ல ; இந்த முழு உலகத்திற்கும் பேரிழப்பாகவே முடியும்.

எனவே, தமிழர்கள் தமிழில் பேசும் போது தமிழ்ச் சொற்களையே பயன் படுத்துகிற முயற்சியும் பயிற்சியும் வெறுமென தமிழ் மொழியை அழிவிலிருந்து காக்கின்ற முயற்சி மட்டுமல்ல; அது ஓர் இன மீட்சி நோக்கிய முயற்சி ; ஐம்பதாயிரம் (50,000) ஆண்டுகாலமாக நம் முன்னோர்கள் உழைத்துத் தொகுத்துச் சேர்த்த  அறிவுச் சொத்தை கட்டிக் காத்திடும் முயற்சி; நம் தமிழரின மக்களின் மான வாழ்வின்  காப்பு முயற்சி; முழு உலகத்தையும் ஓர் உறவுக் குடும்பமாக ஆக்கிடும் ஓர் உயர்ந்த முயற்சி.

- அருள்நிலா.

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்.. அந்த தமிழின் மரபில் வந்தவர்கள் நாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.