23/02/2021

நோயறிதலும், சோதிடமும்...

 


எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அதன் அடிப்படை நோயறிதல் (diagnosis) ஆகும்.

நோயின் தன்மை, அதன் தீவிரம் போன்றவைகளை அறிந்தால் மட்டுமே முறையான சிகிச்சை என்பது சாத்தியமாகும்.

ஒவ்வொரு வகை மருத்துவமும் தனக்கே உரித்தான சில பிரத்யேக நோயறியும் முறைகளை கடைபிடிக்கிறது.

இவற்றில் எது சிறந்தது, எது சரியானது என்பதெல்லாம் விவாதங்களுக்கு உரியது. இந்தப் பதிவு அதைப் பற்றியதுமில்லை.

சித்த மருத்துவத்தில் மனித உடலானது வாத, பித்த, சிலேத்தும என மூன்று வகையாக கூறப்படுகிறது.

வாத, பித்த, சிலேத்தும சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது.

சித்த மருத்துவத்தில் வாத நோய்கள் என என்பதும், பித்த நோய்களென நாற்பதும், சிலேத்தும நோய்கள் என தொண்ணூறும் கூறப்பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவத்தில் நோயறிய சோதிடத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய புலிப்பாணி வைத்திய காவியம் என்னும் நூலில் காணக்கிடைக்கும் ஒரு நோயறியும் முறை பற்றியதே இந்தப் பதிவு.

பாரப்பா இன்னமொரு விவரங்கேளு

பகர்தனுங் குருசனியும் வாதநாடி

சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்

சிறப்பான பாம்புகளும் பித்தநாடி

நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்

நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று

வீரப்பா போகருட கடாட்சத்தாலே

விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு.

- புலிப்பாணி.

ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு வரப்போகிற அல்லது வந்திருக்கின்ற நோயைப் பற்றி தெளிவாக அறியலாம் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.

புதன், குரு மற்றும் சனி 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் வாத நோய் பீடிக்கும் என்றும், சூரியன், செவ்வாய், 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் பித்த நோய் பீடிக்கும் என்றும், 6-ஆம் வீட்டில் இராகு, கேது நின்றாலும் பித்த நாடி நோய்ப் பாதிக்குமாம்.

சந்திரன், சுக்கிரன் 6-ஆம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகுமாம்.

மேலும், 6-ஆம் வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் நின்று குரு பார்வை இன்றி இருப்பின் நோய் தாக்கம் (6-ஆம் வீட்டில் அதிபதியின் நாடியைப் பொறுத்து) அந்த நாடியை பொறுத்து அதிகரித்துக் காணப்படும் என்கிறார்.

வாதநாடி: குரு, புதன், சனி

பித்த நாடி: சூரியன், செவ்வாய், இராகு, கேது

சிலேத்தும நாடி: சந்திரன், சுக்கிரன்

இரத்த அழுத்தம், இருதய நோய், நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்கள்.

சீரணம் தொடர்பான பிரச்சினைகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் பித்த நோய்கள்.

மூச்சுவிடுதல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.