10/03/2021

வெறுப்பின்மை...

 


வெறுப்பு என்பது சினம் எண்ணும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு. 

வெறுப்பு உணர்ச்சி பிறரை, பிற பொருட்களை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். 

இது வெறுப்பு உணர்ச்சியின் இளநிலை என்று கூறலாம். அதன் முதுநிலை பிறரைத் துன்புறுத்தல் அல்லது அழித்தலே. 

இவ்விரண்டு நிலைகளும் மனித வாழ்வின் நலத்தையும் வளத்தையும் அழிக்க வல்லவை. இதனால் வெறுப்பு உணர்ச்சி  அற்ற மன நிலை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். 

வெறுப்பு ஒழிந்தால் மீதம் இருப்பது அன்பு, நட்பு, கருணை இவை தானே...

வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும், மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம். 

நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்து விடுவர். வாழ்வின் இன்பம் இழந்து, தனித்து நின்று துன்புற வேண்டியதே.

ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில். எந்தப் பொருளின் மீது வெறுப்பு இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து அதைப் போக்கிக் கொள்ளுங்கள். 

துன்பம் தருபவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கலாம். உணர்ந்த தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவை இல்லை. 

வெறுப்பின்மை தான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகமே அன்பு ஒளிர் விளக்காகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.