18/06/2017

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன் தேசத் தியாகியா ?


பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார்.

அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார்.

இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார்.

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார் என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார்.

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது...

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு
R. வாஞ்சி அய்யர்.

என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது.

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர்.

ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.