07/06/2017

ஈழப்போரும் ஐயா பழ.நெடுமாறனும்...


1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்..

அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு..

பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது;

பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்;

25-6-82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போனபோதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது;

அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன், ரகு, தங்கவேலாயுதம், அன்டன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர்; போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1-6-82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்;

கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர்; மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்; காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்; தமது தம்பியின் மாமனர் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்; தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை;உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்; பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்;

அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்; ரஞ்சன், பஷீர்காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்;

1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்;

1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்;

திலீபன் உண்ணோ நோன்பிருந்த போது நேரில் சென்றவர் என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்..

அன்று முதல் இன்று வரை தமிழராக தடம் மாறாமல் சுயநலம் இல்லாமல் தமிழர்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.