19/07/2017

திருச்சியில் பரபரப்பு: பழைய இரும்பு கடையில் ராணுவ ஆயுதங்கள்.. வீரர்களே விற்றது அம்பலம்...


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில், கடந்த மாதம் 28ம் தேதி திடீரென குண்டு வெடித்து ஊழியர் மாரிமுத்து பலியானார். உரிமையாளர் அருளானந்தம், கனகராஜ், பாலசுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 23 முதல் 26 வரை வீரப்பூர் வீரமலை வனப்பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரைபிள்ஸ் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய, வெடிக்காத குண்டைகளை, இந்த பழைய இரும்புக் கடையில் விற்றுள்ளனர்.

இது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும், தடயவியல் துறையினரும் போலீசாருடன் இணைந்து கடையில் வேறு எதாவது குண்டுகள் உள்ளனவா என தேடுதல் வேட்டை நடத்தினர்.

சாக்குமூட்டை ஒன்றில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் போலீஸ் தேடுதலில் சிக்கின. மணப்பாறை போலீசார் ரைபிள்ஸ் படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குண்டுகள் பற்றி விசாரித்தனர்.

வெடிகுண்டு பாகங்களை ஆய்வு செய்த போலீசார் அது ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் அதிவேக குண்டு என கண்டறிந்துள்ளனர். இது திருச்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளர் அருளானந்தத்துக்கு நேற்று முன்தினம் நினைவு திரும்பியது. அப்போது அவரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கினர்.

அருளானந்த் அளித்த வாக்குமூலத்தில், ' கடந்த 27ம் தேதி பச்சை நிற ராணுவ ஜிப்சியில் வந்த இரு ராணுவ வீரர்கள் 45 கிலோ எடையுள்ள குண்டுகளை எடுத்து வந்தனர். வெடிகுண்டு என்பதால் நான் வாங்க மறுத்தபோது வீரர்களில் ஒருவர் தமிழில் பேசினார்.

மற்றொரு வீரர் இந்தியில் பேசினார். வெடிக்காது என உத்தரவாதம் கொடுத்தனர். ஒரு கிலோ ரூ.80 என 45 கிலோவுக்கு ரூ.3,600 பெற்றனர் ராணுவ வீரர்கள் என்று தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் தான் குண்டுகளை விற்றனர் என உறுதியாகியுள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னையில் உள்ள தென் பிராந்திய ராணுவ தலைமையகத்திற்கு போலீசார் அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.