09/07/2017

மலேசியா தமிழர்களின் சீற்றம்...


தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்ற போர்வையில் தமிழர்களை சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தொடர்கூட்டத்தில் எதிர்மறையான கருத்துகள் பேசப்பட்டதால் சரமாரியான கேள்விகளுக்கு மத்தியில் கூச்சல் குழப்பம் வெடித்து இறுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவையில் பெரும் சலசலப்பு நிகழ்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஒருவரையொருவர் கைநீட்டிக்கொண்டு மோதும் தன்மையில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்கே  கைகலப்பு ஏற்பட்டு  விடுமோ என்ற அச்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே கூட்டத்தை நிறுத்தினர்.

இந்த சம்பவம் இங்கு கிள்ளான் தெங்கு கிளானா மின் புத்தகசாலை மண்டபத்தில் நிகழ்ந்தது. தமிழகப் பேச்சாளர்களைக் கொண்டு கடந்த வாரம்  தமிழ் உணர்வாளர்கள் மாநாடு இங்கு  நடைபெற்றது. அதன் தொடர் அங்கமாக எல்லா நகரங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருத்தது. இதன் தொடர்பில் இரவு 8 மணிக்கு கூட்டம் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், கூச்சல், குழப்பம், சலசலப்பு வெடித்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

'தமிழர்கள் தொன்று தொட்டு ஒற்றுமை இல்லாத இனம்' என்றும் 'அவர்களால் ஒற்றுமையாக என்றும் வாழ முடியாது' என்றும் 'திராவிடத்தால்தான் இவர்கள் ஒற்றுமைப்படுத்தப்பட்டார்கள்' என்றும் 'திராவிட ஆட்சிகளில்தான் தமிழர் நாடு இந்தியாவில் வளங்கொழிக்கும் மாநிலமாக இருக்கிறது திராவிடத்தாலும் திராவிடக் கட்சிகளாலும்தான் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும்' என்று தமிழகத்திலிருந்து வந்த திராவிட பேச்சாளர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அந்தப் திராவிட பேச்சாளர்களின் பேச்சை வன்மையாக கண்டித்து  கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர், மேடையில் பேசிய பேச்சாளர்களிடம் கேள்விகளைக் கேட்டுக் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பதட்டமும்  சலசலப்பும் ஏற்பட்டது.

தமிழ் உணர்வாளர் மாநாட்டு கூட்டத்தில் தற்காலத் தமிழர் உணர்வு, குமரிக் கண்டத் தமிழர், என்ற தலைப்புகளைத் தொட்டுப் பேசாமல் திராவிடச் சிந்தனையைப் பரப்புவதா? என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பேருரையை  நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை இராஜேந்திரன், பேராசிரியர் அ.மாக்ஸ் ஆகியோர்  பார்வையாளர்களின் கடும் கூச்சலுக்கும் எதிர்ப்புக்கும் இடையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அந்தப் பேச்சாளர்கள் மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் தன்மையில் பேசியதாக கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக   குற்றஞ்சாட்டினர்.

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் சுமார் 83 சதவிகிதத்தினர் தமிழர்கள் என்ற பொதுவான கணிப்புக்கிடையில் இங்குள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வந்துள்ள திராவிட கருத்தியலுடைய தமிழ் தேசியத்திற்கு எதிராக தமிழகப் பேச்சாளர்கள் நம் மலேசிய தமிழர்களை மூளைச் சலவை செய்து திராவிடம் எனும் சித்தாந்தத்தைத் தமிழர்களிடம் பரப்பும் தன்மையில் பேசுவது  கடும் கண்டனத்திற்கு உரியது என்றனர்.

அக்கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்களின் தலைமைப் பொறுப்பாளர் எழிலன், மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர் பெருமாள், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் எல்.சேகரன் உள்ளிட்ட தமிழர் சமூக இயக்கப் பொறுப்பாளர்கள்   தமிழக பேச்சாளர்களின் எகத்தாளப் பேச்சுக்கு கடும் கண்டனக்குரல் எழுப்பினர்.

தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும் தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் இன்னும் பல வழிகளில் சிறுமைப்படுத்திப் பேசியவர்களை, இந்தப் பேச்சாளர்கள் முன்னிலைப்படுத்தி மூளைச் சலவை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று  அவர்கள் எச்சரித்தனர்.

தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில் தமிழகப் பேச்சாளர்கள் தொடர்ந்து  நாடு தழுவிய நிலையில் இதே தன்மையில் கூட்டத்தை நடத்துவார்களேயானால் போலீஸில் புகார் செய்யப்படும் என்றும் அவர்கள் நினைவுறுத்தினர். இந்நிலையில் கூட்டத்தில் பதற்றம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதேபோன்று கடந்த புதன் கிழமை காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டு தொடர் கூட்டத்திலும் பார்வையாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திராவிட கருத்தியலுடைய தமிழகப் பேச்சாளர்கள் தடுமாறியதை தொடர்ந்து கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-மலேசியாவிலிருந்து,
கே.வி.சுதன்,
கிள்ளான்

தமிழ்நாட்டில் பற்றியெறியும் பிரச்சினைகள் பல உள்ளன. தமிழ்நாட்டில் நின்று போராடுவதை விட்டு விட்டு மலேசியாவில் திராவிடத்தை பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

அங்குள்ள மலேசிய மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க போயிருந்தால் கூட பரவாயில்லை. அங்கு போய் எதிரும் புதிருமாக உள்ள, தமிழ்நாட்டில் எந்த போராட்டத்திலும் ஒன்று சேராமல் உள்ள தி.க.வும் (திராவிடர் கழகம்), தி.வி.க.வும் (திராவிடர் விடுதலை கழகம்), தி.மு.க. ஏஜென்டான மதிமாறனும், இந்திய அரசின் உளவாளியான அ.மார்க்சும் ஆகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து திராவிடத்தை பாதுகாக்க அவசியம் என்ன நேர்ந்தது?

குறிப்பாக, அ.மார்க்சு இந்திய அரசுக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். தமிழர் உரிமை சார்ந்த காவிரி , முல்லைப் பெரியாறு என்று எதற்கும் வந்ததில்லை. சாதிக்கலவரம் நடந்தால் அறிக்கை தயார் செய்து கொடுத்து ஊதியம் பெற்றுக் கொள்பவர்.

 அதுமட்டுமல்ல, கடந்த காலத்தில் தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டு என்று கூறி வந்தவர். அந்த வன்மம் இன்னும் மறையவில்லை. அ.மார்க்சின் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்தில் தி.மு.க. ஏஜென்ட் மதிமாறனுக்கும் உடன்பாடு உண்டு.

மலேசியாவில் எதிர்ப்பு தெரிவித்த தமிழர்களை பார்ப்பன அடிவருடிகள் என்று தப்பி வந்தவர்கள் தற்போது குற்றம் சாட்டுகின்றனர். இது பெரியார் காலத்திலிருந்து வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.  தமிழர்களை சிந்தனையற்ற மடையர்கள் என்று மறைமுகமாக சொல்வதுதான் இதன் பொருள். கருத்தை கருத்தால் வெல்வதுதான் பகுத்தறிவாளருக்கு அழகு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.