31/08/2017

காமராசரை அடித்துப்போட்ட ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு...


ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,  ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.

மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.

வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.

‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.

மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.