26/10/2017

சித்தராவது எப்படி - 23...


ஆனாய் ஆனால் அடைந்தாயா ? என்ற கேள்வி...

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் வெகு விரைவாக பிரபலமாகி விடுவார்கள்..

பிரபலமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை... ஏதோ ஒரு தெய்வத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. பிடித்து பிடித்து அதுவாய் ஆக வேண்டும்..

அதில் தன் நிலையை கரைத்து, அதில் தன் மன நிலையை பலவீனப் படுத்தி செயல் அற்ற ஒரு முடமான நிலைக்கு போக வேண்டும்..

அந்த தெய்வ சிந்தனையில், தனக்கு இறைவனால் அளிக்கப் பட்ட கடமைகளை உதறி தள்ளி விட்டு, அவன் சிந்தனையிலேயே தன் ஜீவ சக்தி முழுமையாக இழந்து எந்த உலக குறிக்கோளையையும் பற்றி நிற்க முடியாத அளவிற்கு பலம் இழந்து, அதனால் உலகப் பற்றுகளை பற்ற முடியாமல் எந்த பற்றும் பற்றாத ஞானி என்ற போலியான பட்டம் பெற்று, தன் முடிவு காலத்தில் தேள் கொட்டிய திருடன் போல், உயிர் துயரத்தை சொல்ல முடியாமல் பெரும் வேதனையை அனுபவித்து, தன் துன் மரணத்தை ஜீவ சமாதியாக தன்னை போற்றியவர்களால் கொண்டாடி கொள்ள வேண்டியது தான்..

நிகழ் கால மகா சக்தியாகிய சிவகலப்பு என்ற உன்னத நிலையை அறவே இழந்து, சவகலப்பு நோக்கிய பயணமே அது..

சிவனை சதா காலம் தன் மனதால் நினைத்து நினைத்து சிவனை பற்றிய விசயங்களாகவே ஆகி விடுவார்களே தவிர சிவன் பெற்ற சக்தியை ஒரு சிறு துளியேனும் பெற்றார்கள் என்றால் கேள்வி குறிதான்...

மனதால் ஆனார்கள் ஆனால் சக்தியை அடைந்தார்களா என்றால் துளியும் இருக்காது..

நிகழ் காலத்தில் இருக்க துளிசக்திகூட இல்லாத அளவிற்கு தெய்வ சிந்தனையால் மோன நிலை என்ற நிகழ் கால தொடர்பை அறுந்த சவ நிலைக்கு ஒத்த மயக்க நிலையை மக்கள் அதிகமாக மதிப்பது ஒரு அறியாமையே...

சிவநிலை என்ற உயர்ந்த தத்துவம் நாம் இழந்து பல காலம் ஆகிவிட்டது..

அதை மீண்டும் நிலை நிறுத்துவது என்பது முடியாதது போல் தோன்றினாலும் நிறைநிலை மனிதன் தோற்றத்திற்கான இரகசியங்கள் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அது முடியும் என்பதே உறுதியாக தெரிகிறது..

சில உறுதி செய்யப் படாத விதிவிலக்குகள் பக்தியோகத்தில் இருந்தாலும், அவைகள் தனது இரகசியங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பழைமையாக உள்ளது...

காளி பக்தரான மிக பிரபலமடைந்த இராமகிருஷ்னர் மோன நிலையிலேயே மயங்கி மயங்கி தன் தேகத்தை காப்பாற்றும் வல்லமையை இழந்து புற்று நோயால் மரண அடைந்தார்..

உலகிற்கு, உலக உய்ய என்ன உளவுகளை வைத்து சென்றார் என்றால் கேள்விக் குறிதான்..

ஆனால் உளவுகளை பக்தி யோகம் தாண்டிய நிலையில் சில தகுந்த உளவுகளை வைத்து விட்டுப் போன 3000 ஆண்டுகள் வாழ்ந்த, திருமூலருக்கு எந்த மடங்களும் அமைப்புகளும் இல்லை..

காரணம் மயக்கத்தை நீக்கி தெய்வீக விழிப்பு நிலையாகிய சிவகலப்பை தந்ததால், மயக்கத்தை விரும்பும், மாயையில் சிக்கிய மக்கள், அதனை விரும்பவில்லை..

மயக்கம் தரும் போதை பொருள்களிலும், மயக்கம் தரும் கருத்து போதைகளிலும் மயங்கி கிடக்கவே மனிதனின் சோம்பல் மனம் விரும்புகிறது..

ஆகவேதான் விழிப்பு நிலையில் உள்ள புத்தியும், அறிவும், செயல் படவேண்டிய அவசியம் ஆகிறது..

அவை செயல் பட தொடங்கி விட்டால் எந்த மயக்கமும், தன்னை மறந்த மோன நிலையும், தூக்கமும், முடிவில் மரணமும் இல்லை என்பதாகிறது..

இந்த உயர்ந்த உன்னத நிலை, வெறும் சாதாரண சுவாச ஒழுங்கில் உள்ளது என்றால் மனம் ஏற்றுக் கொள்வது இல்லை..

விழிப்பு நிலையை வெறுப்பதே மனதின் இயல்பு..

இந்த உலகம் ஒரு நிறைநிலை மனிதன் வரவுக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது..

அந்த ஏக்கத்தை போக்க நிறைநிலை மனிதனாக முனைவோமாக....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.