28/10/2017

இலுமினாட்டி - லூசிஃபர் Vs இப்லீஸ்?


இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன், இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஆனால் யார் இந்த லூசிஃபர்? என்பதில் நம்மில் பலர் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தவறான ஒரு புரிதலில் தான் இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

நம்மில் சிலர் தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் இஸ்லாம் யாரை இப்லீஸ் என்ற பெயர் கொண்டு அழைக்கிறதோ அந்த ஒரு(ஜின்)வன் தான் லூசிஃபர் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

கிருஸ்துவமும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறது. உண்மையில் யார் இந்த லூசிஃபர்? மத ரீதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட எனது ஆய்வை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

லூசிஃபர்..

ஒளியைக் கொண்டு வந்தவன், அவன் கொண்டு வந்த ஒளியை பெற்றுக் கொண்டவர்களை (இலுமினாட்டிகள்-ஒளியை பெற்றுக் கொண்டவர்கள்) வைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன். இவன் மனித இனத்தைச் சேர்ந்தவனல்ல. மேற்கத்தியர்கள் இவனை வேற்றுகிரகவாசி என்கின்றனர். உண்மை தான் இவனது இனம் வேற்று கிரகங்களில் வசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இந்திய மரபு வழிப்புராணங்கள் இவனது இனத்தை இராக்ஷசர்கள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது. இஸ்லாம் இவனது இனத்திற்கு ஜின் என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த மூன்று பெயர்களும் ஒரே இனத்தைத்தான் குறிக்கின்றன.

லூசிஃபர் மனித இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் மனித இனத்தை சேர்ந்தவனான தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று சொல்வது முறையாகாது. ஆனால் இப்லீஸும் ஜின் இனத்தை சேர்ந்தவன் தான் எனும் போது லூசிஃபரும் இப்லீஸும் ஒரே ஜின்னாக இருக்கலாம் என்ற எண்ணம் வருவது இயல்புதான். உண்மையில் இவர்கள் இருவரும் ஒருவர் தானா? என்பது பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.

கர்வம் கொண்ட மூடன்..

இஸ்லாமியர்களின் வேத நூலான திருகுர்ஆனில் பல இடங்களில் இப்லீஸ் கர்வம் கொண்டதாக வருகிறது. மேலும் அவன் இறைவனைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறான் என்றும் வருகிறது.

இந்த குறிப்புகளை மேலோட்டமாக வைத்தே இஸ்லாமியர்களில் சிலர் இப்லீஸ் தான் லூசிஃபர் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆனால் லூசிஃபர் கர்வம் கொண்டதற்கான காரணம், அவன் பரப்பிய பொய், நோக்கம் மற்றும் இலக்கு இவற்றை இப்லீஸோடு சற்று ஆழமாக ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் என்பது விளங்கும்.

லூசிஃபர்..

ஜின்களின் குறிப்பிட்ட சில இனத்தவர்களிடம் மனிதர்கள் அதிலும் குறிப்பாக அரசர்கள் பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தனர். பண்டைய இந்தியா, எகிப்து, கிரேக்க நாகரீகங்கள் பற்றிய குறிப்புகளில் அதற்கு ஆதாரம் இருக்கிறது. இவ்வாறாக தானும் தனது குடும்பமும் தான் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறோம் என்று எண்ணி அதன் மூலம் கர்வம் கொண்டவன் இந்த லூசிஃபர். இதைத் தான் திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடுகிறது. இவனது கர்வம் மனிதர்கள் பூமிக்கு வந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்டது.

ஆனால் இப்லீஸ் தனக்கு வழங்கப்பட்ட பதவி, தனது உடல் அமைப்பு, ஆற்றல் மற்றும் அது சார்ந்த இயல்பு இவைகளினால் கர்வம் கொண்டான். மேலும் இவன் மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு முன்பே கர்வம் கொண்டு விட்டான். எனவே திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடப்படுவது இவனைப் பற்றி அல்ல என்பது தெளிவாக நமக்கு விளங்குகிறது.

அதேபோல், லூசிஃபரும் இறைவனைப் பற்றிய பொய்யை ஜின்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தான். இறைவனுக்கு குழந்தைகள் இருப்பதாகவும், இறந்த யாரையும் அவன் உயிர்ப்பிக்க மாட்டான் என்றும், பூமியில் உள்ளவர்களைக் கொண்டு (அதாவது மனிதர்களைக் கொண்டு) இறைவனை வெல்ல முடியும் என்றும் அவன் ஜின்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததாக திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 3, 4, 7 மற்றும் 12 சொல்கிறது.

இந்த வசனங்கள் இப்லீஸைத் தான் குறிக்கிறது என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் இது இப்லீஸ் அல்லாத வேறு ஒரு ஜின்னையே குறிக்கிறது.

திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 5ல் ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால் அந்த மூடன் சொன்னதை நம்பியதாக மற்றொரு ஜின் சொல்கிறது. மனிதனுக்கு கட்டுப்பட மறுத்த அந்த கணமே இறைவன் இப்லீஸை சபித்து உன்னையும் உன்னை பின்பற்றும் மனித மற்றும் ஜின்களையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் என்று கூறிவிட்டு பிறகு ஒரு ஜின் அதுவும் முந்திய வேதங்களைப் பற்றிய அறிவுள்ள ஒரு ஜின் எப்படி ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்லாது என்ற அடிப்படையில் அந்த மூடன் சொன்னதை நம்பியிருக்கும்.

இப்லீஸ் ஒரு பக்கம் இறைவனைப் பற்றி பொய்யை பரப்பிக் கொண்டிருந்தான் அவன் யார், அவனது நோக்கம் என்ன என்பது பற்றிய விஷயங்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருந்தது.

எனவே தான் இப்லீஸும் அவனது பிள்ளைகளான ஷைத்தான்களும் தவிர மற்ற ஜின்கள் யாரும் இறைவனைப் பற்றி பொய் சொல்லமாட்டார்கள் என்று ஜின்கள் எண்ணிக் கொண்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே அந்த மூடன் சொன்னதை இந்த ஜின்கள் நம்பின எனில், எந்த மூடனான ஜின் இப்லீஸ் தான் என்று எப்படி சொல்ல முடியும்? அந்த வசனம் இப்லீஸ் அல்லாத மற்றோரு கர்வம் கொண்ட மூடனான லூசிஃபரை தான் குறிக்கிறது.

கர்வம் கொண்டதற்கான காரணம் மற்றும் காலம், பொய் நம்பப்பட்டதற்கான காரணம் இவற்றின் அடிப்படையில் லூசிஃபர் மற்றும் இப்லீஸ் இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் தான் என்பது தெளிவாகிறது.

நோக்கம்..

இவர்களின் வேறுவேறான இலக்கு மற்றும் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதன் மூலம் இவர்கள் வேறுவேறான இருவர் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர முடியும்.

லூசிஃபர்..

மிக முக்கியமாக இவன் மனிதர்களை உயிரோடு வைத்து (அடிமையாக்கி) ஆளவேண்டும் என்று நினைக்கிறான். இவனது இலக்கு மனிதனல்ல. பூமியில் இறைவனை வெல்ல முடியும் என்ற எண்ணத்தில் அவனை வெல்வதையே தனது இலக்காக ஆக்கிக் கொண்டிருக்கிறான். இவனது இலக்கும் நோக்கமும் இவனுக்கு ஏற்பட்ட கர்வத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை தவிர மற்ற மனிதர்களை இவன் வெறுக்கவில்லை.

மேலும் இலுமினாட்டிகளை இவன் நேசிக்கத்தான் செய்கிறான்.nதன்னை ஆதரிப்பவர்கள் நலம் நாடுகிறான். தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை முழுமையாக அழித்து விட்டு தனது ஆதரவாளர்களான மனிதர்களுக்கு பூமியில் சுகபோக வாழ்வை கொடுக்க வேண்டும் என்பது இவனது நோக்கங்களில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கு தான் அளித்த வாக்கை முழுமையாக நிறைவேற்றுவான்.

இப்லீஸ்..

மனிதர்களை நரகத்தில் போட்டு அழிக்க துடிக்கிறான். மனிதர்கள் தான் அவனது எதிரிகளும் இலக்கும். தன்னை எதிர்ப்பவர்கள், தனது ஆதரவாளர்கள் என அனைத்து மனிதர்களையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறான். இவனின் ஒரே நோக்கம் முழு மனித இனத்தின் சர்வ நாசம். இவனது நோக்கமும் இலக்கும் மனித இனத்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட கோபத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தனக்கு ஆதரவளிக்கும் மனிதனாக இருந்தாலும் அவனும் நரகத்தில் சென்று அழிய வேண்டும் என்பதே இவனது ஒரே விருப்பம், எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவன் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை துளியும் நிறைவேற்ற மாட்டான். மனிதர்கள் மரணித்து நரகம் செல்லத் தேவையான அனைத்து சூழல்களையும்  உருவாக்கவே முயல்வான்.

இதுவே லூசிஃபரும் இப்லீஸும் வேறுவேறான இருவர் என்பதற்கு நான் தரும் ஆதாரம். அதேபோல் கிருஸ்துவ மத நூல்களிலும் லூசிஃபர் என்ற வார்த்தை சாத்தானைக் குறிக்க கையாளப்படவில்லை. இதன் அடிப்படையில் லூசிஃபர், இப்லீஸ் இந்த இரண்டு பெயர்களும் ஒரே ஜின்னை குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

லூசிஃபர் இப்லீஸ் இல்லை என்பதால் அவன் நல்லவன் என்று சொல்வதோ அல்லது உண்மையில் அவன் மனித குலத்திற்கான ஒளியைக் கொண்டு வந்தவன் தான் என்று சொல்வதோ இந்த பதிவின் நோக்கம் அல்ல.

அதேபோல் லூசிஃபரும் இப்லீஸும் நீண்ட காலமாகவே இணைத்து தான் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பதையும் மறுப்பதற்கில்லை.

உண்மையில் லூசிஃபர் ஒரு மூடன். எதிராளியின் முழு பலம் என்ன என்பதை உணரமுடியாத அளவிற்கு கர்வம் தலைக்கு ஏறிய கிறுக்கன். இறைவனின் கட்டளைகளை மீறுவதாலும், உண்மையான இறைவனை விட்டுவிட்டு லூசிஃபரை இறைவனாக நினைப்பதாலும் இவனின் ஆதரவாளர்களை இறைவன் வெறுக்கிறான்.

நடக்கவிருக்கும் இறுதிப்போரில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பதாலும், யாராலும் எதிர்கொள்ள முடியாத சூர்(எக்காளம்) லூசிஃபரின் உயிரை பறிக்கும் என்பதாலும் இறுதி வரை இவனுக்கும் இவனது அடிமைகளுக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை என்பதாலும், முடிவில் இவனுக்கும் இவனது மனித ஜின் அடிமைகளுக்கும் இழிவுபடுத்தும் வேதனை காத்திருக்கிறது என்பதாலும் நாம் இவர்களைக் கண்டு அஞ்சவோ, இவர்களுக்குப்பின் செல்லவோ அவசியமில்லை.

இறைவன் நாடினால் நாம் தான் வெற்றியடைவோம் என்பது இன்றும் என்றும் இலுமினாட்டிகளால் ஏற்றுக்கொள்ள (ஜீரணிக்க) முடியாத உண்மை...

தகவல் - musthafays...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.