09/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப் படுவார்களா - 1...


உலகத்தின் இறுதி என்று சொன்னவுடன் ஒட்டுமொத்தமாக பூமி அழிக்கப்பட போகிறது என பலர் பொருள் கொண்டு பதட்டத்துடன் அச்சப்ப்பட்டு நிற்கிறார்கள் அறியாமையால்.

உண்மையில் உலகம் என்ற வார்த்தைக்கும் நாம் வாழும் பூமி என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பூமியில் அழிவு என்பது பூகம்பத்தால் சேதப்படுதலும் அக்னி காற்று நீர் இவைகளால்  சேதப்படுதலும் என்றாலும் எல்லா இடங்களும் பாழ் பட்டு போகப் போவதில்லை.

பூமி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும் , உதாரணமாய் ஏழு கடல்கள் நான்கு கடல்களாய் மாறிப்போனாலும் வட தென் துருவங்கள் தன்னுடைய இடத்தை மாற்றி கொண்டாலும் காந்த புலன்கள் மாறுபட்டு நின்றாலும் சீதோஷ்ண நிலைகளால் சீற்றம் கொண்டு நின்றாலும் பூமி பூமிதான்.  அது தன் பணியில் இடைவிடாது சுழன்று கொண்டு இருக்கும். 

இந்த இயற்கை சீற்றங்களால் மானுடகுலம் முற்றிலுமாக அழிந்து போகாது. உலகம் முடிவுக்கு வரும் என்றதன் உட்பொருளை உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் இதுவரை வாழ்ந்த கலாச்சாரம் பூமியில் காணாது ஒழிந்து புதிய கலாச்சாரத்திற்கு காலம் நம்மை அழைத்துச் செல்லும்.

பார்ப்பதற்கு பூமியும் புதியதாய் தோன்றுவது போல் நிற்கும் . அதில் வாழும் மக்களின் வாழ்க்கையும் கொண்டு நிற்கும் கோட்பாடும் அனுஷ்டானமும் பக்தியும் ஒரே தன்மை உடையதாய் அமைந்திருக்கும் இப்படித்தான் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்லிக் கொள்ளும் போது அது ஏதோ வானத்திலே அந்தரத்திலே நிற்பதாய் பலர் எண்ணுகிறார்கள். இவர்கள் எண்ணுகிற மாதிரி எந்த சொர்க்கமும் நரகமும் வானத்தில் இல்லை. ஆனால் சொர்க்கம் நரகம் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு பூமியிலே.

இப்படி பூமியிலே சொர்க்கம் நரகம் அமையும் என்றால் என்று அமையும் என்ற எண்ணம் உங்களிடம் எதிர்நோக்கி இருக்கிறது அல்லவா.

கோரக்கரின் துல்லிய கூற்று 5040 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழலும் கல்பம் அதாவது மக்களின் வாழ்க்கை கலாச்சாரம் இதுகாறும் காணாத கண்டிராத ஒரு உன்னத கலாச்சாரம் பூமியில் உதிக்கும் என்பதும் உருவமற்ற ஒளி ரூபமான ஜோதி மயமான அற்புத இறைவன் பூமிக்கு வருவதும் ஞான வள்ளல் ஞானத்தை தருவதும் ஏகாதிபத்திய இறைகொள்கையை பூமியில் நிலை நாட்டுவதும் பூமியில் இருக்கும் அனைத்து மத மார்க்க தத்துவங்கள் அனைத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கைவாதம் பொருள் முதல்வாதம் முதலாகிய கம்யூனிஸ சித்தாந்தம் உட்பட அனைத்தும்   இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும்.

எல்லாம் புதிது . வானம் புதிது பூமி புதிது என சொல்லுமாறு புது வாழ்வியல் நெறிமுறையோடு புது ஞானம் புறப்பட்டு வந்து பூமியை ஆட்கொண்டு அருள் கொண்டு நிற்கும்.

ஊனமில்லா வாழ்வும் மரணமில்லா வாழ்வும் நோயில்லா வாழ்வும் மூப்பில்லா வாழ்வும் என்று மக்கள் பெற்று நிற்கிறார்களோ அதுவே சொர்க்கத்தின் காலமாகும்.

உலகத்தில் இறையாளர்களாவும் தீர்க்கதரிசிகளாகவும் ரிஷிகளாகவும் முனிவர்களாகவும் சித்தர்களாகவும் வந்து நின்ற அத்தனை பேரும் இறக்கி வைத்த இறுதி காட்சி ஒன்றே ஆயினும் அக்காட்சி மிகத்தெளிவாய் தமிழ் சித்தர்களால் முனிவர்களால் தமிழ் தீர்க்கதரிசிகளால் மிகத்தெளிவாய் குறிப்பிடப்பட்டிருப்பது அருமையிலும் அருமை பெருமையிலும் பெருமை .

இப்படிப்பட்ட அந்த நாள் ஆரம்பமாகும் தருணங்களை பற்றி சொல்லியுள்ள தீர்க்கதரிசன காட்சிகள் அனைத்தும் அவர்களின் கூற்றுப்படி அழகுப்பட பூமியில் அரங்கேற்றம் ஆகிவிட்டன.

இனிய நாளை நோக்கி நடைபோட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்த நாள் என்று துவங்கும் ? எப்படி துவங்கும்? எங்கே துவங்கும்? என்பதற்கான தெளிவான காட்சிகள் குரான், பைபிளை விட தமிழ் தீர்க்கதரிசிகள் முனிவர்கள் ரிஷிகள் கண்ட காட்சிகளிலே குறிப்பாக அகத்தியர், போகர் ,காகபுசண்டர், கோரக்கர் ,பிரமங்காரு, தீர்க்கதரிசி முத்துக்குட்டி , பார்சிய முனிவர் , ஓடம் தீர்க்கதரிசி, வள்ளலார் இவர்களின் திவ்ய தீர்க்கதரிசனத்தின் படி தெளிவாய் உணரமுடிகிறது.

இந்த தெய்வத்திரு தமிழ்நாட்டில் தான் தொடக்கம் பெறப்போகிறது புதிய கலாச்சாரம் என எண்ணும் போது தமிழ் மண் தலை நிமிர்ந்து நிற்கிறது இப்படிப்பட்ட நாள் வந்து விட்டது என அறிந்து கொள்வதற்கு இன்று தொடங்கிவிட்டது என எண்ணுவதற்கு என்ன அடையாளம் எல்லோரும் அறியும்படி இருக்கும் என்ற வினா வினவ வேண்டியிருக்கிறது அல்லவா.

இறந்தோர் எழுப்பப்பட்டதாய் செய்தி என்று உண்மை செய்தியாய் உலகுக்கு வருகிறதோ அந்த நாள் அன்று துவங்கிவிட்டது என்று தெளிவுபட தமிழ் நாட்டில் நடக்கப்போகிற அந்த நாளை தரணிக்கு புகழ்சேர்க்கும் நாள் என தமிழ் தீர்க்கதரிசிகள் திடமாய் செப்பி நிற்கின்றனர்.

இடத்தை பற்றி ஆராய்கின்ற போது இவர்கள் அனைவருடைய கருத்தின் பிரகாரம் ஆய்ந்து தெளிகின்ற போது தொல்காப்பியத்திலே உள்ள ஐவகை நிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலத்தில் மருதம் நெய்தலும் மயங்கும் பூமியில்  தெரியுதலாய் இருக்கும் இறைவனின் வரவு என்பதை உற்று நோக்கும் போது கடலை சார்ந்த நாற்பது மைல் அளவுக்குள்ளே இருக்கும் இடமாக அது இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

திட்டவட்டமாய் தீர்க்கதரிசி முத்துக்குட்டி மலையை சார்ந்த இடம் இல்லை. முல்லை சார்ந்த இடம் இல்லை  எனத் தெளிவுப்பட கூறுகிறார்.

அவர் விவரிக்கின்ற போது பொதுவாக மலை என்றால் இறைவனுக்கு தொடர்புடையதாய் கூறப்படும், எண்ணப்படும் கருத்தின்படி  அவரிடம் கேட்கப்படுகின்ற போது அவர்திடமாய் மறுத்து விடுகிறார் இல்லை என்று.

அத்தோடு இன்னொன்றையும் நாம் சிறப்பாய் சிந்தித்துபார்க்க வேண்டியிருக்கிறது.

இறுதிகாலத்தில் தோன்றும் காமதேனு கற்பக விருட்சம் என்ற முத்திரைக்கு  கர்த்தா என சொல்லிக் கொள்ளும் இறுதி இறையாளன். முதலில் அம்முத்திரையை வெளியிடும் போது தான் அமர்ந்து வெளியிடும் அந்த மரம் புன்னைமர சாயல் என நமக்கு புகட்டி நிற்கிறார் கோரக்கர். இந்த புன்னை மரம் எங்கு வாழும் விருட்சம் என்று பார்த்தால் மருதம் நெய்தலில் மட்டுமே வளரும் மகத்தான மரம்.

அது மட்டுமல்ல ஒரு புன்னை மரம் இருந்தால் அதன் அருகில் இருக்கும் தென்னை மரம் உட்பட அனைத்து மரங்களும் செழித்து வளரும். தன்னருகில் இருக்கும் அனைத்து விருட்சத்திற்கும் ஆற்றலை தரும் விருட்சமாய் இந்த புன்னை விருட்சம் இருக்கும் என ஆராய்சியாளர்கள் கூறுவதை அறிவீர்கள்.

பழைய ஏற்பாட்டில் பைபிளில் கூட இறுதி இறையாளனக்கு மக்கள் நித்திரையை களைக்கும் முத்திரையாய் பத்திரை மாற்று தங்கமாய் எழுந்து நிற்கும் கருவாலிமரம் தன் அருகில் இருக்கின்ற அனைத்து மரங்களையும் செழிப்பாய் வளரசெய்து பலன் கொடுக்கச் செய்யும் அற்புத மரம் என்று குறிப்பிட்டு நிற்பதையும் மனம் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது.

ஆலமரம் இருக்கிறதே அது தன் கிளைகளிலிருந்து வேர்களை விழுதுகளாய் பூமியைநோக்கி செலுத்தும். ஆனால் இந்த புன்னை மரமோ தன்னுடைய வேர்களிலிருந்து பற்பல செடிகளை முளைக்கச் செய்து நிற்கும் ஆற்றலைக் கொண்டது.

இப்படி இறுதியில் வரும் இறையாளன் புன்னை மரம் போல தன்னை சார்ந்து இருக்கின்ற அத்தனை பேரையும் நல்ல ஞான செடிகளாய் ஞான மரங்களாய் ஆக்கித்தரும் அற்புத ஞான கொண்டவராய் இருப்பார் என்பதும் புரிகிறது அல்லவா...

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல... சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.