09/12/2017

சித்தர்கள் வாழ்வின் இரகசியம்...


இன்றைய இருப்பத்தோராம் நூற்றாண்டில், நமது பிரச்சனைகளுக்கும், துன்பத்திற்கும், உடலில் உள்ள நோய்களுக்கும் முக்கிய காரணம், நமது மனதிலுள்ள பயமும் நம்பிக்கையின்மையும் நிறைவேறாத ஆசைகளும், அறியாமைகளுமேயாகும்.

நமது மனதைப் பற்றியும், நமது உடலை பற்றியும் நாம் அறிந்து கொண்டால் நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் நன்றாக புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

நாம் ஓரிடத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து ஆராய்ந்தால் அந்த மண்ணின் மூலக் கூறுகளை அறியலாம்.

அதே போலத் தான் நமது உடலை ஆராய்ந்தால் இந்த உலகத்தில் உள்ளவற்றை அறியலாம்.

காரணம் நாம் இந்த மண்ணில் தோன்றினோம். முடிவில் நமது இறப்புக்கு பின் இதே மண்ணில் கலந்து விடுவோம்.

இதை சித்தர்கள்,"அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு"என்றனர்.

அண்டம் என்றால் உலகம் - பிண்டம் என்றால் நமது உடல்.

அதே போல ஓர் ஆலமரத்தின் விதையை பார்த்தால் மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதனுள் ஓர் ஆலமரமே ஒளிந்திருக்கிறது. அந்த நுண்ணிய ஆலின் விதை வளர்ந்து மிகப்பெரிய ஆலமரமாகிறது.

அது போல் மிகப் பெரிய இறைசக்தி நம்முள் நிறைந்துள்ளது. அதை நாம் உணர்ந்தால் இறைவனின் அம்சம் நம்முள் இறைவன் உறைந்துள்ளான் என்பது புரியும்.

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புல னைந்துங் காளா மணி விளக்கே
- திருமந்திரம்.1823.

கருத்து:

நமது உடல் இறைவன் வாழுமிடம்.
உடம்பும் சதையுமாகிய நமது உடல் இறைவனின் ஆலயம். வாய் - கோபுர வாசல்.

தெளிந்த மனமுடையவர்களுக்கு நமது உடலிலுள்ள ஆன்மாவே சிவலிங்கம்.
நமது இந்திரியங்கள் ஐந்தும் ஒளி பொருந்திய விளக்குகளாகும். அது போலவே இந்த உலகம் (universe) முழுவதும் சக்தியின் (energy) கூட்டமைப்பு என்று இயற்பியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அந்த விதியானது அசையும் பொருட்களை சக்தியாகவும் அசையா நிலைபெற்றவற்றை சிவமாகவும் நம் சித்தர்கள் கண்டார்கள்.

நமது ஆன்மா சிவமாகவும் மூச்சை சக்தியாகவும் பாவித்தார்கள். நாம் உலகில் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக மூச்சின் வழியாக உயிர் காற்றை பெறுகிறோம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் நமது ஆயுட்காலம் நீடிக்கும்.

மேலும் நமது மனநிலைக்கு தகுந்தாற் போல் நமது மூச்சின் ஓட்டம் வேறுபடும்.

உதாரணமாக நாம் பயப்பட்டாலோ ஆத்திரப்பட்டாலோ மூச்சின் வேகம் அதிகரிக்கும். மூச்சின் எண்ணிக்கை அதிகமானால் நமது ஆயுட்காலம் குறையும். இந்த தத்துவத்தை உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள்.

இந்த பிராணயாம முறையை நமக்கு தந்தருளியவர்கள் நம் சித்தர்கள்.

'காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே'
- திருமந்திரம்.571.

மூச்சுக்காற்றை நமது உடலில் கும்பக முறையில் நிறுத்தினால், காலனை கடந்து சென்று நீண்ட காலம் வாழலாம் என்று காட்டியுள்ளார்கள்.

அதை போலவே சித்தர்கள் எல்லோரும் நமது வாழ்க்கையில் செல்வம் நிலையாமை, அறம் செய்ய வேண்டும் என்பது போன்ற வாழ்க்கைக்கு தகுந்த பல கருத்துக்களை அவர்கள் பாடல்கள் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்கள்.

இனி 10 சித்தர்கள் இயற்றிய பாடல்களையும் அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களையும். பல பாடல்களின் உட்கருத்தையும் விளக்கவுள்ளோம்.

சித்தர் பாடல்களில் நேரடியாக பொழிப்புரை எழுதுவது கடினம்.

காரணம் சித்தர்களின் பாடல்களில், பல சொற்களின் பொருளை நாம் நம் அனுபவத்தின் மூலமாகத் தான் உணர முடியும்.

வீதி-நமது நெற்றி
முச்சந்தி-புருவ மத்தி
தண்டு-முதுகு தண்டு
குதிரை-ஓடும் மூச்சு
நாயகன்-நம் உடலிலுள்ள இறைவன்.

'தறி கட்டு' என்றால் யோகத்தில் தியானத்தில் நிமிர்ந்து உட்காருவது. ஐந்து தலை நாகம் என்றால் நமது ஐம்புலன்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் நம் வழிகாட்டும் பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டு, கருத்துக்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

அது போல வாழ்க்கை வழிமுறை, ஆகம சாஸ்த்திரம், யோகம், தந்திர வழிபாடு, இறைவனோடு ஐக்கியமாகும் முறை குருதரிசனம் போன்றவை கொண்டது திருமுறைகளாகும்.

ஆகையால் இன்றைக்கு நமது வாழ்விற்கு உதவும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தர்கள் இறைவனை தம் உடலில் கண்டவர்கள். அவர்களின் வாழ்வியியல் முறைகளின் விளக்கங்களை கேட்டால் நமது மனதிலுள்ள குற்றங்கள் மாயைகள் நீங்கி நாமும் இறைவனின் அம்சம் என்பதை உணரலாம்.

வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு மற்றவர்கள் வேறு என்ற எண்ணமேயாகும்.

மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும். நமது உடலின் உபாதைகள் நீங்கும். மரணமில்லா பெரு வாழ்வுகிட்டும். எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக.

இறை வணக்கம்..

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுவதும் பாலவி யாமே.
 - திருமந்திரம்1824.

கருத்து:

யாகத்தில் இடப் பட்ட நிவேத்தியத்தை உண்ணுகிற சிவப் பெருமானுக்கு அர்பபணிக்க தக்க பொருட்கள் நம்மிடம் இல்லை.

காலையும் மாலையும் இறைவனுக்கு நிவேத்திக்கும் பொருள் அவனை குளிர்விக்கும் பாடல்களே, அவையே அவனுக்கு உணவாகும்.

ஆகையால், இப்பாடல்களை அவனுக்கு நிவேதனமாக செய்வோம்.

இறைவனின் கருணை..

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலக துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
-திருமந்திரம்339.

கருத்து:

உலகத்திலுள்ள உயிர்களை,மனதில் உள்ள அந்தகனான,"அறியாமை"என்ற அசுரன் வருத்தம் செய்தான்.துன்பம் கொடுக்கிறானே என்று தேவர்கள் இறைவனை வேண்ட,அவன் ஞானமாகிய சூலத்தை கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான்.

நமது வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு முக்கிய காரணம்"அறியாமை"யேயாகும். அதனை அழிக்க இறைவனை அடிபணிவோம்.

சித்த வாழ்வு..

நம்மில் பல பேர் இன்று பொருளாதார வசதிகளில் மிகுந்து நிற்கிறோம். வாழ்க்கையில் பட்டம், பதவி போன்றவற்றை பெற்று, பல நிறுவனங்களை நிறுவி, திறன் பட செயலாற்றி வருகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் திறன்பட நிறுவிக்கும் நம்மால் நம் குடும்ப வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், ஏமாற்றம், தோல்வி, எதிர்பார்புகளை சமாளிக்க முடியவில்லை.

அதனால் தான் மனம் சம்பந்தப் பட்ட நோய்கள் பெருகியுள்ளன. இரத்த அழுத்தம், குடற்புண், கொழுப்பு நோய், நீரிழவு நோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான நோய்கள் இன்று நம் மக்களிடம் காணப்படுகின்றன.

இன்று மருந்து கடைகளில் நிரம்பி வழிகின்ற மாத்திரைகளில் 67 விழுக்காடு மனம் சம்பந்த பட்ட நோய்களை தீர்க்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளாகும்.

ஆனால் இந்த பிரச்சனைகளுக்கும் உலக வாழ்க்கைக்கும், விளக்கமளித்தவர்கள் நம் சித்தர்களேயாவார்கள்.

நாம் ஒரு தத்துவ பொக்கிஷத்தின் மீது உட்கார்ந்து கொண்டு எங்கோ யாரையோ தேடி கொண்டிருக்கிறோம்.

உலகெங்கும் இன்று புத்த மதத்தின் விபாசனா என்ற தியான முறை பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையின் தத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர்கள் நம் சித்தர்கள். சித்தர் வான்மீகரின் தத்துவமே வாசி யோக முறைகளாகும்.

மூச்சை கட்டுப்படுத்துவதே புத்தரின் விபாசனா தியான முறையாக கருதப்படுகிறது.

வான்மீகர் நாகை அருகே பிறந்து வாழ்ந்து திருவாரூரில் சித்தியானவர்.

போகர் சீனாவிற்கு சென்ற சீன மருத்துவ முறைகளை இங்கு கொணந்தவர்.

சீனாவிலும் திபத்திலும் இன்று இவரின் வைத்திய முறைகள் பின்பற்றப்படுகின்றன. நமது நாடி முறைப்படி நமது உடலில் உள்ளங்கால் முதல் உச்சி வரை 72000 நாடிகள் ஓடுகின்றன. அதை சீர்படுத்தினால் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்பது சித்தர்களின் கருத்தாகும்.

இன்று சீனாவில் அக்குபஞ்சர், அக்கு பிரசர் என்று நாடிகள் மெரிடியன் என்றும் அங்குள்ள வைத்திய முறைகள் பின்பற்றப்படுகிறது.

அக்கு என்றால் புள்ளி பிரசர் என்றால் துளைப்பது. நமது உடலில் பல வர்ம புள்ளிகள் உள்ளன. நோய்களை பொறுத்து அப்புள்ளிகளை சிறு ஊசியினால் துளைத்து தூண்டி விடுவதன் மூலம் பல நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

சித்தர்கள் இலக்கியங்களை படிக்கும் போது அவர்கள் நாத்தியவாதி என்று எண்ண தோன்றும். சாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக கண்டித்திருப்பதை அவர்களின் பாடல்கள் மூலம் காணலாம். ஆனால் அவர்கள் இறைவனை தமது உடலில் கண்டவர்கள். ஆகையால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் மறைமொழிகள் 'சூன்ய சம்பாஷனைகள்' அவற்றுக்கு நேரடி அர்த்தம் காண்பது அரிது.
ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அவை மிகப் பெரிய பொக்கிஷங்கள் இன்று வெளியுலகத்திற்கு அவர்களின் அருளுரைகள் தெரியவில்லை. இவற்றை எல்லோரும் அறிந்து கொண்டால் நம் வாழ்க்கை இனிமையாகும்.

தன்னையறிதல்...

ஒருவன் தன்னையறிய வேண்டும். மற்றவற்றை அவன் சார்ந்தோ, பின்பற்றியோ செல்லும் போது தான் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றன. தன்னுள் உறையும் ஆன்மாவை பிற பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் அது பந்தப்பட்டதாக தெரிகிறது. அது மனதின் அறியாமைகளாகும். உண்மையில் ஆன்மா எதனுடனும் பந்தப்படாது. நாம் பந்தத்திலிருந்து விடுதலை பெறுதல் இல்லை. உண்மையில் அது அறியப்படுவது. நாம், நம்மை, பிறப் பொருளிலிருந்து தனித்துப் பார்க்கும் போது பந்தம், பயம், போன்றவை ஏற்படுகின்றன. நம்மிலுள்ள ஆன்மா உலகெங்கும் வியாபித்துள்ளது. தனித்து எதுவுமில்லை என்ற எண்ணம், நமது மனதில் உதித்தால் பந்தமும் இல்லை பயமும் இலலை.

ஆன்மாவின் முக்தி...

ஆன்மா (மனித உயிர்) தேகத்தை பற்றிய போது, புருஷன் சிவனென்றும், எதையும் பற்றாதிருக்கும் போது ஆன்மாவென்றும் கூறப்படுகிறது. நாம் உலகிலுள்ள போது ஐந்து அவஸ்த்தைக்கு உள்ளாகிறோம்.

1. ஜாக்கிரம்(விழிப்பு நிலை)
2.சொப்பனம்(கனவு நிலை)
3.சுழுத்தி(உறக்க நிலை)
4.துரியம்(புலன்களுடன் பொருந்தும் நிலை)
5.துரியாதீதம்(புலன்களுடன் பொருந்தா நிலை).

விழிப்பு நிலை..

நாம் விழிப்பு நிலையின் போது மெய், வாய், கண், காது, மூக்கு போன்ற ஐந்து புலன்களும், வாக்கு(வாய்), பாதம்(கால்), பாணி(கை), பாயுரு(மலவாய்), உபஸ்தம்(கருவாய், நீர் வாய்) போன்ற கர்மேந்திரங்களும் செயல்படுகின்றன.

அவற்றுடன் பிராணன், அபானன், உதானன், விபானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவ தத்தன், தனஞ்செயன் என்ற பத்து வாயுக்களும்..

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றுடன் புருடன் ஆக 25 தத்துவங்கள் செயல்படுகின்றன.

சொப்பனம்...

வாயு பத்து ஆகும். அதனுடன் அந்தகரணங்கள் ஆக 14 தத்துவங்கள் செயல்படுகின்றன.

உறக்க நிலை...

(சுழுப்தி): உடலுடன், பிராணனும் சித்தமும் இயங்குவது.

துரியம்: புருடனின் கருவியாகிய பிராணன் மட்டும் இயங்குவது.

துரியாதீதம்: இந்நிலையில் ஜீவன்,சிவனுடன் சேர்ந்து சிவம் மட்டும் விளங்கும்.

விழிப்பு நிலையில் ஆன்மா பிரபஞ்சத்தோடு கலந்து நிற்கும்.

ஆன்மா, தான் அனுபவித்ததை கழுத்துக்கு மேலே ஒளிமயமாக காணுதல் கனவு நிலையாகும்.

ஆன்மா அகந்தையை விட்டு, தன் வசமற்று, உடலிருக்கும் நிலை உறக்க நிலை (சுழுத்தி), ஆன்மா மூலக் பிரகிருதியுடன் பொருந்தி இருக்கும் நிலை துரியமாகும்.

ஆன்மா அவஸ்தைகளை நீங்கி நிற்கும் நிலை துரியாதீதம் ஆன்மா அகங்காரத்தை விட்டு ஒளி நிலையில் நிற்கும்.

சிவ ஞானத்தால் ஐந்நு அவஸ்தைகளையும் நீக்கி பிறவி முடிவுறுகிறது.

ஆன்மா, சிவனுடன் சேரும் வரை, நாம் இந்த ஐந்து அவஸ்தைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

தன்னையறிவாம ஃதன்றிப்
பின்னையறிவது பேயறி வாகுமே
- திருமந்திரம்2318.

தான் யார்? தன் நிலை என்ன? என்பதை அறிவது தன்னையறியும் அறிவாகும். அஃதில்லாமல் பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய் போல் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அலைய வேண்டும்).

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே
- திருமந்திரம்2329.

சித்தர்களின் பிராணயாம யோக முறை (வாசியோகம்)...

நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறோம். ஆகையால் ஒரு நாளைக்கு 15×60×24 அதாவது சுமார் 21600 தடவை மூச்சு விடுகிறோம்.

நமது மூச்சிற்கும் நமது மன நிலைக்கும் தொடர்பு உண்டு. நாம் கோபமாய் இருக்கும் போதும் பயத்துடன் இருக்கும் போதும் நாம் அதிக வேகமாக மூச்சு விடுகிறோம். அப்படி வேகமாக விடும் மூச்சுக் காற்றால் நமது ஆயுள் குறையும். மேலும் நமது மூச்சை வெறும் உயிர்காற்றுகொடுக்கும் கருவிகளாகவும் கரியமிலா வாயுவை வெளியேற்றும் நடவடிக்கைகளாகவும்,நமது உடல் சூட்டை 98.4 டிகிரி பாரன்ஹீட்டில் நிலை நிறுத்தி வைக்கும் ஓர் சாதனமாகவும் இன்றைய மருத்துவம் நோக்குகிறது.

ஆனால் நம் சித்தர்கள் , பிராணன் மூலம் நம் ஆயுளை நீடிக்கும் சாதனமாக இதனை (காயகல்பம்) கருதினார்கள்.

நமது உடலிலுள்ள சக்தி அதிகம் வெளியேறாமல் இருந்தால் நம்மால் நீண்ட நாட்கள் உலகில் நோயின்றி வாழ முடியும் என்று கருதினார்கள். நம்முள் உட்புகும் காற்று (சக்தி) உடலில் இருந்து வெளியேறும் காற்று (சிவம்) என்று கூறினார்கள்.

மேலும் சொல்லப் போனால் நமது பிராணன் (மூச்சு), பிரபஞ்சத்திலுள்ள சக்தியை நமது நாடி நரம்புகளுக்கு கொடுக்கும். நமது உடலில் ஒரு வித முன்னோட்டம் போன்ற ஓர் சக்தி உண்டாகும். நமது உடலும் ஒளி வீசும்.இதனால் நமது உடல் ஒளி மயமாகும் என்று கருதினார்கள். அப்படிபட்ட சித்த புருஷர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கும், அந்த ஒளியால் பயன் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

நமது இடது மூக்கின் துவாரத்தின் வழியாக ஓடும் மூச்சுக் காற்றை சந்திர நாடி என்றும் வலது மூக்கின் துவாரம் வழியாக ஓடும் மூச்சை சூரிய நாடி என்றும் அழைத்தார்கள். இரண்டும் சேர்ந்து ஓடும் மூச்சை அக்னி என்றும் அழைத்தார்கள். மூச்சு ஓடுதலை நிலை நிறுத்தி வைத்தலை கும்பகம் என்றும் கூறினார்கள்.

பிராணயாமம் செய்யும் போது நமது உடல் எப்படி அமர வேண்டுமோ அப்படி அமர்ந்தால் நமக்கு நன்மை பயக்கும் என்பதை ஆசனங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த ஆசனங்கள் 108 வகைப்படும். அதில் முக்கியமானவை எட்டு வகைப்படும்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், சிம்மாசனம், கோமுகாசனம், சோதிராசனம், வீராசனம் மற்றும் சுகாசனம்.

அதை போலவே, சித்தர்களின் கூற்றுப்படி நாம் மூச்சு விடும் சில நேரங்களில் இடது அல்லது வலது மூக்கில், மூச்சுக்காற்று அதிகமாக ஓடும். சுமார் இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு மூச்சு மாறி வேறொரு மூக்கில் வலுவாக ஓடும்.

இடது மூக்கில் மூச்சுக் காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது இடது மூளை அதிகமாக வேலை செய்யும்.

அதே போல மூச்சுக்காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது, எதையும் புத்தி கூர்மையுடன் புரிந்து கொள்ளல், எதையும் புதிய முறையில் சிந்தித்தல், உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தல் ஆகியவை நடைபெறுகிறது.

மூச்சு, மூக்கில் மாறி மாறி ஓடுவதை சில பயிற்சிகளின் மூலமாக மாற்றியமைக்க முடியும்.

இரண்டு மூக்கிலும் ஒன்றாக மூச்சு ஓடுவது (சுழுமுனை) நாடி எனப்படும். நமது உடலும் நல்ல நிலையில் இருக்கும். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை உண்டாகும். இதனை நமது சித்தர்கள் வாசியோகம் என்றார்கள்.

வாசியை திருப்பினால் சிவா சிவா என்கின்ற மூல மந்திரம்.

சித்தர்கள் கூற்றுப்படி நமது உடம்பில் உள்ளங்காலிலிருந்து உச்சி வரை 72000 நாடிகள் உள்ளன. அதன் வழியாகத் தான் நமது சக்தி, உடல் முழுமைக்கும் பரவுகிறது.

அதைபோல நமது உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானத்தின் மூலம் தட்டி எழுப்பப் படுவதால், நமது உடலில் புத்துணர்ச்சி உண்டாகுகிறது.

அவையாவன...

1.மூலாதாரம்:  அது நமது குதம் (ஆசனவாய்) அருகிலுள்ளது. அங்கு குண்டலினி சக்தி சுருட்டி பாம்பு வடிவில் உள்ளது. அன்னை பராசக்தி தனியாக வீற்றிருக்கிறாள். எல்லா காமத்திற்கு காரணம் மூலாதாரம். பிரகிருதி (மண்) தத்துவம்.

2.சுவாதிஸ்டானம்: இது மூலாதாரத்திற்கு மேலே உள்ளது. நமது அனுபவங்களுக்கும் ஆழ் மன எண்ணங்களுக்கும், இருப்பிடமாக உள்ளது. இங்கு பிரம்மாவும், சரஸ்வதியும் உறையும் இடம். நெருப்பு தத்துவம்.

3.மணிபூரகம்: இது தான் நமது உணவு செரித்தல், உடல் சூட்டை நிர்ணயித்தல் போன்ற வற்றையும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை நிர்ணயிக்ககறது. திருமாலும் திருமகளும் அமர்ந்துள்ள இடம். நீர் தத்துவம்.

4.அநாகதம்: நமது இதயத்தருகில் உள்ளது. அன்பு பாசம் எதையும் புதிதாக செய்யும் திறன், விதியை மாற்றும் திறமை ஆகியவற்றை நிர்ணயிப்பது. வாயு தத்துவமாகும். ருத்திரன், பார்வதி அமர்ந்துள்ள இடம்.

5. விசுத்தி: நமது கழுத்து பகுதியில் அமைந்துள்ள இடம். எதையும் பகுத்து பார்க்கும் அறிவு, வாழ்க்கையின் அறிவு, பிறரை அறியும் அறிவு, என்பதை இது நிர்ணயிக்கின்றன. ஆகாச தத்துவம் மகேஸ்வரனும், மகேஸ்வரியும் அமர்ந்திருப்பார்கள்.

6.ஆக்ஞை: நமது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது.

நமது மூளையின் செயல்களை கட்டுப்படுத்துவது. நமது அறிவு, எதையும் புரிந்து கொள்ளல், மணவுறுதி, புத்தி, மனதிற்கு அப்பார்பட்டதையும் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை நிர்ணயிப்பது. சதாசிவமும், மனோன்மணியும் அமர்ந்துள்ள இடம்.

7.சகஸ்ரம் : நமது தலை உச்சியில் உள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்பர். எல்லையில்லா பெருவெளி ,வெட்ட வெளி என்று சித்தர்கள் கூறுவார்கள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி சிரசை அடைதல், மூலத்திலுள்ள சக்தி தேவி, சிவனை அடைதல், சிற்றுயிர், பேருயிருடன் கலத்தல் என்று கூறுவர்.

இதனை ஜோதி தரிசனம், முக்தி நிலை, பேரின்பநிலை என்றும் கூறலாம்.

பரமசிவனும் பார்வதியும் சேர்ந்து அமர்ந்துள்ள இடம்.

மனித ஆன்மாவின் மன விகாரங்கள் நீங்கி, மாயை நீங்கி, தான் என்ற அகங்காரம் நீங்கி, உலகின் தன்மையான முக்குணங்களின் தன்மை நீங்கி, பாசங்கள் நீங்கி, அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் சக்தியுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கும்.

தனித்தன்மை நீங்கி விடுவதால் இனி பிறப்பு, இறப்பு இல்லை. இது தான் முக்தி நிலை.

இது தான் நம் சித்தர்கள் காட்டிய வழியாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.