16/03/2018

புரட்சியே தமிழனைத் தலை நிமிர வைக்கும்...


நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருப்பார்கள். குறிப்பாக தமிழ் இனம் பின் தள்ளப்பட்ட இனமாகவே இருப்பார்கள். தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தி தமிழர் தேசங்களில் சூறையாட முனையும் பல ஆரிய மற்றும்  திராவிடரே முன்னோக்கி செல்வார்கள்.

தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதரத்தில் உயர்வு பெற வேண்டும்.

இவைகள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்குள் புரட்சி வந்தாலே ஒழிய அவர்களின் பொருளாதார நிலமையை யாராலும் மாற்ற முடியாது. 

அப்படியாயின் எப்படி வறுமையின் கீழ் வாழும் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களை மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

தமது அன்றாட வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்களின் வம்சாவளிக்கு என்ன நடக்கும் என்பதை அவர்கள் கடுகளவும் சிந்திக்க முடியாதவர்கள்.

தமிழ் நாட்டு ஊடகங்களோ அவர்களின் ஊடகங்கள் மூலமாக எப்படி பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் செயலாற்றுகின்றார்கள். சில ஊடகங்கள் சமூக மாற்றத்துக்காக வெளிவந்தாலும் அவைகள் பின்னாளில் தோல்வியைத் தழுவுகின்றன.

குறிப்பாக இந்த நிறுவனங்கள் மூடி விடும் அளவு பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். திரையுலக விமர்சனைங்களையும் மற்றும் கோமாளி அரசியலையும் மக்கள் முன் கொண்டு செல்லும் ஊடகங்களைத் தான் பல கோடி மக்கள் ஆதரித்து பணத்தை அள்ளி வீசுகின்றார்கள்.

ஆக ஊடகத் தர்மம் என்பது காசோலையால் மூடி மறைக்கப்பட்டு விட்டதென்பது தான் மறைக்க முடியாத உண்மை.

இப்படியான ஒரு நிலையிலேயே தமிழினம் இந்தியாவில் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

இந்திய மத்திய சர்க்காரோ மக்கள் எவ்வளவு அறியாமையாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு அவர்களில் செல்வாக்கு புது டெல்லியில் உயரும் என்று கணக்குப் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போதாதென்று தமிழ் நாட்டை ஆளும் தான் ஒரு பச்சைத் திராவிடன் என்று பறைசாற்றும் கருணாநிதியோ தனது சுய லாபத்திற்கும் குறிப்பாக தனது குடும்பத்தை எப்படி அடுத்த பல நூறாண்டுகள் இந்தியாவை ஆளும் வர்க்கமாக ஆக்க வேண்டும் என்று இந்த தள்ளாடும் வயதிலும் போராடும் கருணாநிதியே சிந்திக்கும் போது எப்படி பாமர தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் இனம் பற்றி சிந்தித்து செயலாற்றுவார்கள் என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி.

இருப்பினும் இந்த மக்கள் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து செயலாற்றுவார்களேயானால் இப்படியான சுயநலவாதிகள் நிச்சயம் மக்களால் இனம் காணப்படுவார்கள்.

ஆக இவைகள் அனைத்துக்கும் ஒரே வழி அமைதி வழியில் உருவாகும் மாபெரும் எழுச்சியே.

ஈழத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியில் போராடி பல இன்னல்களை சந்தித்தவேளை தமிழ் நாட்டு மக்களோ தாமும் தமது குடும்பமும் என்றே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.

சில நூறு தமிழ் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்கள் சுய லாபத்திற்காக ஈழத்தமிழரின் விடுதலைப் பயணத்தைக் கையாண்டார்கள்.

வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களிடம் ஈழத் தமிழரின் உண்மையான பிரச்சனை எடுத்துச் செல்லப்படவில்லை.

உண்மையிலையே ஈழத் தமிழரின் துன்பத்தை ஒவ்வொரு சந்து பொந்துகளுக்கும் தமிழ் நாட்டில் எடுத்துச் செல்லப்பட்டிருக்குமாயின் நிச்சயம் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரையும் தமிழருக்கு என்ற ஒரு தனியான நாடு அமைய வேண்டும் என்ற தாகத்துடன் ஈழம் காணப் புறப்பட்ட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞரையும் காப்பாற்றி இருந்திருக்கலாம்.

பல சுயநலவாதிகள் இவைகளைச் செய்யாமல் தமது வளர்ச்சியிலையே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சோறு சாண் வயிற்றிற்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர் நிச்சயம் ஒரு புரட்சி கொண்டவர்களாக இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்து இந்திய நடுவண் அரசையும் ஏன் முழு உலகையும் ஈழம் பால் கவர்ந்து சிறிலங்காவின் கொடுங்கோல் தேசத்தை பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்க முடியும்.

ஆனால் நடந்தது என்ன?

இவர்களின் சோம்பேறித்தனமும் தமது அன்றாட வாழ்க்கையிலும் பாழாய்ப் போன திரையுலகமும் இந்த மக்களை முடமாக்கி இன்று தமிழன் பல இன்னல்களை பல நாடுகளில் சந்தித்து கொண்டுள்ளான். ஏன், இந்தியாவிற்குள் இருக்கும் தமிழனுக்கே பாதுகாப்பில்லை.

இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு புரட்சி நடாத்தினால் பல மாற்றங்களை காண முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.