20/03/2018

ஆழ்மனதின் எண்ணம் வண்ணமாவது திண்ணம்...


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும்.

ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம்.

அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை.

அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.

சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம் தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும்.

பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்தி தான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம் தான் அறிவுமனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம்.

எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள் தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வது தான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது.

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.