02/05/2018

சித்தர் ஆவது எப்படி ? - 19...


பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...

பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?

மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வநிலைக்கு நிகராக இருக்கிறான்..

பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...

மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை.. அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..

இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..

ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..

மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல் பாடு நடக்கிறது...

ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..

ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....

இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது... அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவநிலை..

பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்.. பிறவி தாண்டிய அனுபவநிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது...

இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...

பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...

ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...

இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..

வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவநிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..

பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..

அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..

பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...

இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது.. ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...

எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...

ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..

இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..

இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..

வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...

ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.