05/07/2018

உயிராயுதமான மாவீர்களுக்காக....


தமிழீழ இராணுவத்தின் முதுகெலும்புகளே
தமிழரின் உரிமை வெல்ல பிறந்திட்ட தவப்புதல்வர்களே
தலைசாய்த்து வணங்குகிறேன்...

கருவறை தாண்டி தாயின் மடி தவழ்ந்து
கருவோடு பிறந்த வீரம் சுமந்து
உணர்வோடு போராடி
கல்லறையில் கருவாகி போனீரே கரும்புலிகளே!

கடலன்னை தேர் ஏறி
கதிரவனின் ஒளி வாங்கி
தமிழர் கடல் காத்திட
கந்தகம் சுமந்து
எதிரிப் படைக்கலத்தை நிர்மூலமாக்கி
கடலன்னையின் கருவறையில் உறங்கும் கரும்புலியே
வணங்குறோம் எந்தன் உறவே!

தமிழரின் பலவீனத்தை தகர்த்த
பலமான உயிராயுதங்களே!
எதிரியின் பலவீனத்தை அறிந்து
அதை
உங்கள் வெற்றியாக மாற்றிய
தமிழின கடவுள்களே!
தாழ் போற்றி வணங்குகிறோம்..

தரையாடி கடலோடி வானோடு மேகமதில் புகுந்து
தேகமதில் ஊறிய தமிழ் உணர்வை
யாகஞ் செய்து
தமிழருக்காக உயிர்த்தியாகஞ் செய்த பெரு வள்ளல்களே!
யாம் ஒருபோதும்
உங்களை மறப்பதில்லை..

சாவின் வேரை அசைத்து
சாவுக்கோர் நாள் குறித்து
சாவினை சாதனையாக்கிய
சாதனை குழந்தைகளே! - உங்கள்
சாவினை வென்றும் எம்மோடு வாழ்கிறீர்கள்..

சாவிற்கும் பயத்தை கொடுத்த அவதார புருசர்களே!
தமிழீழம் எங்கும் மீண்டும்
உயிர்த்தெழுங்கள்..

மில்லர் அண்ணா ஊட்டி உரமிது
கொடும் பகை அறுக்கும் அறமிது
எதிர்ப்படும் தடைகள் யாவும் தகர்த்திடும் வரமிது
தமிழருக்கென்றொரு வீரம் இது
எந்த இனத்துக்கும் இல்லா தனித்துவமும் இது..

காலனைக் கூட ஒரு கணம்
நிர்க்கதியாக்கும்
கரும்புலி வீரர்களே!
காலத்தை வென்றே என்றும்
நீர்க்கமல நிறைந்து நீங்கள்
வாழ்வீர்களே!

வீரவணக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.