18/08/2018

தமிழகத்தில் கோடி வடஇந்தியர்கள் குடியேற்றம்...


மெல்ல ஊடுருவும் பிறமொழி அரசியல் அபாயம்...

தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாகி இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத எண்ணிக்கையையும் சேர்த்தால் ஒரு கோடி வர வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் வட இந்தியர் குடியேற்றம் அதிகரித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி ஆகியவை வட இந்தியர்கள் ஆதிக்கப் பகுதியாகும்.

தேர்தல் காலங்களில் இந்தியில்தான் பிரசாரம் செய்ய வேண்டும்; இந்தியில் தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்கிற நிலைமை இருந்து வருகிறது. ஆனாலும் இதை மவுனமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.

குக்கிராமங்களில் வடஇந்தியர்கள்...

இப்போது தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட வட இந்தியர்கள் குடியேற்றங்கள் அதிகரித்திருக்கிறது. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஒரு தனியார் மில் பணிக்காக ஒடிஷாவைச் சேர்ந்த 70 பேர் அழைத்துவரப்பட்டு ஒரு காலனி போன்ற குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. இப்படி வட இந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக தமிழக தொழிற்சாலைகளுக்காக தொழிலாளர்கள் 'இறக்குமதி' செய்யப்படுகின்றனர். இங்கே கிடைக்கும் சொற்ப கூலி அவர்களுக்ககு சொர்க்கமாக இருக்கிறது; இங்கே முறைகேடாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் பெற்றுவிட முடியும். அப்புறம் என்ன சுகமான வாழ்வு.. இதற்காக படையெடுத்து வருகின்றன பெருந்தொழிலாளர்கள் கூட்டம் ஒரு பக்கம்.

குறுக்குவழி குடியேற்றம்...

மற்றொரு பக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசுப் பணிகளில் முறைகேடாக திணிக்கப்படும் வட இந்தியர்கள். அண்மையில் தமிழக தபால் நிலையங்களில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தமிழில் 90 மதிப்பெண்கள் பெற்றவர்களாக சான்றிதழ்கள் வைத்திருந்தனர் என்கிற தகவலும் வெளியாகி இருந்தது. இதுபோன்ற அநீதியான வகையில் தமிழகத்தில் குடியேறும் நடுத்தவர வர்க்கத்தினர் மற்றொரு பக்கம்.

கைவிட்டுபோன தொழில்துறை...

தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பு தேடி இங்கே வந்து இங்கேயே செட்டிலாகிவிடக் கூடியவர்கள் என பல்வேறு காரணிகளால்தான் இவர்களது எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாமகவின் மூத்த வழக்கறிஞர் கே. பாலு எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட ஒரு 5 தொழில்துறைகளைப் பட்டியலிட்டு இவற்றின் சங்கத் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தவர்தான் என்கிறார். தமிழகத் தொழில்துறையில் நீண்டகாலமாக பனியாக்கள் ஆதிக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமான ஒன்றுதான். தமிழகத்தின் நகை அடகுத் தொழிலில் 95% விழுக்காடு மார்வாடிகள் வசம்தான் இருக்கிறது. நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், ஜவுளித்துறை என பல்துறையிலும் அவர்களது ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு வளர்ந்து வரும் சமூகக் கட்டமைப்பில் இவை தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு...

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் கணிசமாக வாழ்கிற போது அம்மாநில மக்கள் தமிழகத்தில் வாழ்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதேநேரத்தில் இதை கடும் விழிப்புடன் தமிழக அரசுடன் அணுக வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தகைய வெளிமாநிலத்தவர் குடியேற்றம் தமிழக சமூக, அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய தனி அமைச்சகமே தேவை என்கின்றனர் இவர்கள். ஏனெனில் தமிழகத்தில் தற்போது ஜாதிவாரியாக வேட்பாளர்களை நியமிக்கும் அவலம் இருக்கிறது. காலப்போக்கில் சவுகார்பேட்டையை உள்ளடக்கிய தொகுதியில் தாங்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சிக்கே என்கிற முழக்கம் எழுந்துவிட்டால் தமிழக அரசியலில் நெருக்கடி உருவாகிவிடும்.

பிற மாநில குடியேற்றம்...

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு இணையாக தமிழர்கள் இருந்த போதும் தமிழர் பகுதிகளில் மட்டும் தமிழரை வேட்பாளராக நிறுத்தும் போக்கு இருந்தது. ஆனால் தற்போது அது மாறி வருகிறது. தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் வாழும் பகுதிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளர் என்கிற முழக்கம் எழும் அபாயத்தைத்தான் இத்தகைய குடியேற்ற அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியல் கனத்த தாக்கத்தைத் ஏற்படுத்தக் கூடிய, புதிய ஊடுருவலாக இருக்கும் மொழி அரசியல் அபாயம் தொடர்பான உரத்த விவாதம் அவசியமே...

- தமிழர் ஆய்வுக் கூடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.