07/09/2018

தமிழகத்தை காக்க வழிச் சொல்லும் பாமக...


இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை (Hydrocarbon Exploration and Licencing Policy- HELP) மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின்   நோக்கம் ஆகும். அதன்படி நாடு முழுவதும் 55 புதிய வட்டங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை  எடுக்க கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட 110 விண்ணப்பங்களில் இருந்து 5 நிறுவனங்களின் 55 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை இறுதி செய்வதற்கான ஹைட்ரோகார்பன் இயக்குனரகத்தின் கூட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தில்லியில் நாளை நடைபெறவிருக்கிறது.

புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ள 55 மண்டலங்களில் 3 தமிழகத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம்,  பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன.

இவற்றில் முதல் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், மற்ற இரு மண்டலங்களுக்கான உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட உள்ளன. இவற்றில் முதல் மண்டலத்தில் 4 இடங்கள், மற்ற இரு மண்டலங்களில் தலா 10 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படலாம். காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது வினாக்களுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்; இதை ஏற்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை  உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.

மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, காவிரி பாசன மாவட்டங்களை  பாலைவனமாக்கி விட்டால், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தடையின்றி செயல்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. அதனால், தான் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்தது. காவிரியில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் பினாமி அரசு பார்த்துக் கொண்டதற்கும் கூட இது தான் காரணமாகும்.

புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள பல இடங்கள் காவிரி கடைமடை பகுதிகளில் தான் அமைந்துள்ளன என்பது இந்தக் குற்றச்சாற்றை வலுப்படுத்துகிறது.  மத்திய அரசின் திட்டங்களும், அதை தமிழக பினாமி அரசு கண்டும் காணாமலும் இருப்பதும் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே, தமிழகத்தில் புதிய மீத்தேன், பாறை எரிவளியை எடுப்பதற்கான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கான உரிமங்களை வழங்கக்கூடாது. இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்'' என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுரித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.