14/10/2018

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு...


ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்,  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஒதுக்கியதையும் தமிழக அரசு ரத்து செய்தது. வ

உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விசாரணையில், வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட  வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், இந்தக்குழு சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஒரு மனுவை அளித்துள்ளது. அதில், 'ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனும் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் வழக்குகளை சிபிஐ விசாரிப்பது என்பது சரியாக இருக்காது. தமிழக காவல்துறையே தொடர்ந்து வழக்கை விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற  இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.