24/11/2018

நான் படித்த உளவியலில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்...


வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அம்சம் தான் மனஅழுத்தம்..

மன அழுத்தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள்.

எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக்குப் பொருந்தி வரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற்சாக நிலையில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை..

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பது தான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம்.

நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான முன்தேவைகள்..

அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்..

நேர்மறை மனப்பாங்கு..

தங்களுடைய திறமைகள் மீது நேர் மறை அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை ; எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள் ; எதையும் விடாமுயற்சியுடன் தொடர்வார்கள். இப்படிப்பட்டவர்களால் மன அழுத்தத்தை வெற்றிகொள்ள முடிகிறது.

மாறாக, தங்களைப் பற்றிய கீழான மதிப்பீட்டினையும் எதிர்காலம் பற்றிய நம் பிக்கையற்ற எதிர்மறை அணுகுமுறை யையும் கொண்டவர்கள், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது கூட, மனச்சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிவிடுகிறோம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவது இதைத் தான்..

சாத்தியமான இலக்குகள்..

நடைமுறை சாத்தியமற்ற சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது தோல்வியில் முடியலாம்.
தொலைதூர இலக்குகள் எனில் அவற்றை அடைவது அவ்வளவு எளிதல்ல என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

பொதுவாக நமது பலம் - பலவீனங்கள், திறமைகள், நிதி வரவுகள் ஆகியவற்றைச் சரியாக மதிப்பிட்டு, பொருத்தமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

வேலைகளைப் படிப்படியாகச் செய்வதற்குத் திட்டமிட வேண்டும். இலக்கை முடிப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இலக்கை முடிக்க திட்டமிட்டதைவிடக் கூடுதலான நேரமும் நிதியும் செலவாகலாம் என்ற கணிப்பும் இருக்க வேண்டும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றில் முக்கியமானவை மீது முதலில் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் சில வேலைகளை ஏற்க வேண்டி வந்தால், அவற்றை முன்கூட்டியே ஏற்க மறுப்பது புத்திசாலித்தனம். சக்திக்கு மீறி ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையுமே முடிக்க முடியாமல் திணறுவது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணமாகி விடும்.

எதிர்மறை எண்ணங்கள் தாக்கும் நேரங்களில் நன்கு ஆலோசித்து செயல் திட்டத்தில் சில தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.

கடினமான சூழ் நிலையை எதிர்கொள்ளப் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லாதது போல் கற்பனை செய்து கொள்வது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வைத் தராது. கூட வேலை செய்பவர்கள் மீது கோபம் ஏற்பட்டால் அதை அப்படியே அமுக்கிவைப்பதை விட வெளிப்படுத்துவதே நல்லது- ஆனால் கவனமான வார்த்தைகளில்.

அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன வென்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்த வார்த்தைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களைச் சீண்டிவிடும் நோக்கில் இருக்கலாகாது.

சொல்லி முடித்த பிறகு அதை விரைவில் மறந்து விடுவதும் நீங்கள் அப்படி மறந்து விட்டீர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு புலப்படும் விதத்தில் இருப்பதும் முக்கியம்.

சமூக ஆதரவு தளம்..

நாம் அனைவருமே இந்த சமூகத்தின் அங்கங்கள். சமூக மனிதர்கள். நம்முடைய எண்ணங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் உற்ற நண்பர்கள் சிலரையாவது தேடிக் கொள்வது பாதுகாப்பானது. மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இதுவும் ஒரு மாமருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.