03/01/2019

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....


குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தைச் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும்.

குண்டலினி =குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்).

இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப் போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது.

ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறது என்பது யோகக் கலையின் அடிப்படை.

அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப் பாம்பு ஊறுவது போல் மேலே ஏறும்...

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....

நமது எல்லா சக்திகளுக்கும், ஆற்றல்களுக்கும் குண்டலினியே திறவுகோள்.

அதைக் கிளப்புவதற்கு மனம் தான் கருவியாக இருக்கிறது.

மன ஒருமைப்பாடும், தாரணை, தியானப் பயிற்சிகளால் அதைக் கிளப்ப முடியும்.

பார்வையாலும், கையாலும், நாக்காலும் கூட கிளப்பிவிடும் ஞானியர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் கட்டணம் வசூலித்து குண்டலனியை கிளப்பி விடும் குருமார்கள் அதிகரித்து விட்டார்கள்.

குண்டலினி கிளம்பும் போது அடிமுதுகில் பட், பட் என்ற சத்தமெழும்பும்.. குறுகுறுப்பு காணப்படும்.

பாம்பு ஊர்ந்து செல்வது போல, பறவை பறப்பது போல, தவளை போல தத்தி, குரங்கு போல தாவி, மீன் போல நீந்தி.. என ஐந்து விதங்களில் குண்டலினியானது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி சகஸ்ராரத்திற்கு போகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

குண்டலினி கிளம்பியவர்களுக்கு நரம்புகள் ஊக்கம் பெறும்.

தேகம் ஆரோக்யமாக விளங்கும்.

பசியைத் தூண்டும்.

புலன்கள் விழிப்பு நிலையில் செயல்படும்.

பாலுணர்ச்சி சக்தி அதிகமாக ஊறும்.

அதை விரயம் செய்யாமல் ஓஜஸாக மாற்றிக் கொண்டால் ஆற்றல் அதிகமாகும்.

ஒழுக்கமில்லாதவர்களுக்கு இதனால் வக்கிரமான எண்ணங்கள் தூண்டப்பட்டு, காமவெறி பிடித்தவர்களாக மாறி விடுவார்கள்.

தீயவர்களுக்கு இதை கிளப்பி விட்டால்.. அகங்காரம், கோபம் அதிகமாகி பேராசைக்காரனாக, திருடனாக, ஏன் கொலைகாரனாக கூட மாறிவிட வாய்ப்புகள் உண்டு.

கடவுளுக்கே சவால் விடுவார்கள்..

இதை நாம் புராண காலம் தொட்டு இன்றளவும் நடைமுறையில் பார்க்கிறோம்.

ஆகவே குண்டலினியை கிளப்ப வேண்டுமெனில், முதலில் நல்லொழுக்கங்களை கடை பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகத்தின் நோக்கமே மனிதனை ஒழுக்கம் உள்ளவனாக வாழ வைப்பது தான்.

தீய பழக்கவழக்கங்கள் உள்ள பலகீனமானவர்களுக்கு அதன் சக்தியை தாங்க முடியாமல் போகும்.

மனதிடம் இல்லாதவர்களுக்கு பைத்தியம் பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

நல்ல குருமார்கள் சீடர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாறும் வரை அவர்களை பக்குவப்படுத்தி போதனைகள் செய்து அவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் என்று உறுதி செய்து கொண்டு அதற்குப் பிறகே குண்டலினியைத் திருப்பி விடுவார்கள்.

அதன் சக்தியைத் தாங்க போதிய பலம் தேவை என்பதினால் ஆசனங்கள், பந்தங்கள், உடல் பயிற்சிகள் யாவும் கற்றுக் கொடுப்பார்கள்.

அதோடு ப்ராணாயாமப் பயிற்சியும் தேவை.

சுவாசம் வசப்பட்டால் மனம் அடங்கும்.

எனவே தான் நாடி சுத்தி அதைத் தொடர்ந்து ப்ராணாயாமம்..

நல்ல குருமுகமாக பயிற்சி மேற் கொண்டால், முதலில் குண்டலினியைக் கிளப்பி, பிறகு ஒவ்வொரு சக்கரமாக இதழ்களை விரித்து அதனுள் அதை ஏற்றி, மீண்டும் கீழிறங்கி விடாமல்..

ஒவ்வொரு இதழ்களையும் மூடி, முடிவில் சகஸ்ராரத்துக்கு ஏற்றி ஆயிரம் இதழ்களிலும் நிரப்பி, ஆனந்தந்தைப் பெற வழிவகை செய்வார்கள்..

ஒவ்வொரு சக்கரங்களும் இயங்க மாதக்கணக்கில் பயிற்சி தேவைப்படும்..

பயிற்சியின் முடிவில் அதிகப் புலனாற்றலும், அஷ்டமா சித்திகளும் கைகூடும். பிரகாசம் உள்ளவர்களாக மாறி விடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.