14/09/2020

தக்கலை அருகே, காதல் திருமணம் செய்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - கடன் தொல்லையால் விபரீதம்...



தக்கலை அருகே முளகுமூடு கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 35), டிரைவர். இவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயினி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜெகன் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானமின்றி தவித்து வந்த அவர், வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவருக்கு மது அருந்தும் பழக்கமும் ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக அவர், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த அவர், தனது அறைக்கு சென்று கதவை மூடி கொண்டார். இதனால், மனைவி ஜெயினி மகள்களுடன் மற்றொரு அறையில் தூங்கச் சென்றார்.

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் கணவரின் அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயினி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஜெகன் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார்.

பின்னர், ஜெயினி இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த டிரைவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.