28/04/2017

இரட்டை இலையுடன் ஜெயா டிவி லோகோவுக்கு தடை... அடுத்த போர்க்கொடியை தூக்கும் அதிமுக கோஷ்டிகள்...


அதிமுகவின் கோஷ்டிகள் ஜெயா டிவியில் பயன்படுத்தப்படும் இரட்டை இலை குறியீட்டை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவியில் இரட்டை இலை சின்னத்தையும், அந்த பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக கோஷ்டிகள் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், சசிகலா சிறை சென்ற பிறகும் அதிமுகவை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் தினகரன். கட்சி, ஆட்சியில் தலையீடு, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது உள்ளிட்டவற்றால் அதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

இதை வைத்து தினகரனை ஓரம்கட்ட நினைத்திருந்த எடப்பாடி அணியினருக்கு கை கொடுத்தது ஓபிஎஸ்ஸும், அவரது அதிமுக இணைப்புக்கான வரவேற்பும். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் சிக்கியுள்ளார்.

இரு கோஷ்டிகள் இணைவதுடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர், ஜெயா டிவி ஆகியவற்றை கைப்பற்ற எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

தற்போது டிடிவி தினகரனை கட்சியிலிருந்து எடப்பாடி அணியினர் ஒதுக்கி வைத்துள்ளனர். தினகரன் கைது செய்யப்பட்ட பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பே்னர்கள், புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

தற்போது ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளேடும் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டி இணைப்புக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது. தினகரனுக்கு ஆதரவான கருத்துகளை மட்டுமே ஜெயா டிவி வெளியிட்டு வருகிறது.

இதனால் முதல் கட்டமாக ஜெயா டிவி என்ற பெயரையும் அதில் உள்ள இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்துவதற்கு அதிமுக அணிகள் தடை விதிக்க கோருவது என திட்டமிட்டுள்ளனவாம். விரைவில் இந்த கோரிக்கை கலகக் குரலாக வெடிக்க இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.