05/05/2017

வள்ளுவனின் கடவுளைத் தொலைத்த தமிழர்கள்...


தலைப்பு அதிர்ச்சி தருகின்றதா? படித்து முடித்ததும் பதிவும் ஆதிர்ச்சி தரும், வள்ளுவர் அப்படி எந்த கடவுளை தன்னுடைய குறளில் குறிப்பிட்டுள்ளார்? எதை நாம் தொலைத்தோம்? அந்த கடவுளுக்கு அப்படி என்ன சிறப்பு?

நண்பர் Manick Rajendran மற்றும் சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் (Cardiology) பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவரோடு கடந்த வாரம் காஞ்சி கோயில்களை காணச் சென்றிருந்தேன், ஆயிரம் கோயில் நகரில் மிகவும் பழைய கோயிலான சுமார் 1300 வருடங்கள் பழமையான கைலாசநாதர் கோயிலுக்கு சென்றிருந்தோம்..

ஒவ்வொரு சிற்பமாக டாக்டர் அவர்களுக்கு விளக்கிக் கொண்டே வருகையில் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட சிற்பத்தின் எதிரே நின்று விளக்கி கொண்டிருக்கையில், நண்பர் மாணிக் இடையில் புகுந்து ஒரு அற்புதமான தகவலை கொடுத்தார்.

இரவு நேர வானில் தெரியும் நட்சத்திரங்களில் பதினாறாவது ஒளி பொருந்திய நட்சத்திரமாக Antares என்ற நட்சத்திரம் உள்ளது, இந்த நட்சத்திரத்தை தான் நம்முடைய ஆட்கள் இந்த சிற்பத்தில் கடவுளுடன் தொடர்பு படுத்தி அழைகிறார்கள் என்ற தகவலைக் கொடுத்தார்.

வீட்டிற்கு திரும்பியதும் இது குறித்து அவரிடம் தொலை பேசி செய்து மேலும் பேசுகையில், இந்த நட்சத்திரம் குறித்த தகவலை இணையத்தில்தேடச் சொல்லி இருந்தார் அப்படி தேடிய போது Antares (α Scorpii, α Sco, Alpha Scorpii) is a red super giant star in the Milky Way Galaxy, Its visual luminosity is about 10,000 times that of the Sun, but because the star radiates a considerable part of its energy in the infrared part of the spectrum, the bolometric luminosity equals roughly 65,000 times that of the Sun. என்ற கூடுதலான அதிர்ச்சியான தகவலைய கொடுத்தது.

இத்தனை தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் தெரிந்த ஒரு விஷயத்தை நம்முடைய ஆட்கள் அந்த காலத்திலயே கண்டு பிடித்து அதை வணங்கி இருப்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

சார் இந்த நட்சத்திரத்தின் தகவல் பிரம்மிப்பாக உள்ளது என்று அவரிடம் கூறுகையில், சசி திருமணம் முடிந்து அம்மி மிதித்து, அருந்ததி நட்சத்திரம் பார்பதற்கு கூட அர்த்தம் உள்ளது, நம்முடைய ஆட்கள் எதையும் பொழுது போக்கிற்காக சொல்லவில்லை, அனைத்திற்க்கு பின்னும் அறிவியல் உள்ளது என்றார்.

என்ன செய்வது பகுத்தறிவாளிகள் உள்ளே புகுந்து பலவற்றை அழித்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டேன், சரி யார் அந்த கடவுள், அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது?

பிறரை வையும் போது மூதேவி என்ற வார்த்தையை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம், அந்த மூதேவி யார் என்று ஒருமுறையேனும் நாம் சிந்தித்திருப்போமா? இல்லை.

சரி இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள், மூதேவி என்பவள் திருமகளின் (லக்ஷ்மி) அக்காள், அதாவது லக்ஷ்மிக்கு மூத்தவள் என்பதால் மூத்ததேவி, அதை தான் நாம் சுருக்கமாக மூதேவி என்றழைக்கிறோம்.

வள்ளுவர் தன்னுடைய அறத்துப்பாலில் 167 வது குறளில் இந்த மூதவியை தவ்வை என்ற பெயரில் முதன் முதலாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்:167)

விளக்கம்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

தவ்வை என்பவள் யார் என புரிந்தது, அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறீர்களா?

மேலே உள்ள படத்தை பாருங்கள் பெரிய வயிறுடன் காக்கைக் கொடியை கையில் ஏந்தி தன்னுடைய இடது பக்கம் மகள் அக்னியுடனும், வலது பக்கம் தன்னுடைய மகன் நந்தியுடனும் பல கோயில்களில் காணக் கிடைப்பார், பல கல்வெட்டுகள் இவரை ஜேஷ்டை என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகின்றது.

ஜேஷ்டாவிற்கும் மேலே கூறிய அந்த நட்சத்திரத்திற்கும் என்ன தொடர்பு என்று இணையத்தில் தேடுகையில் Jyeshtha (The Eldest) (Devanagari ज्येष्ठा)(Telugu: ఝ్యెష్ఠా) (Tamil: கேட்டை) is the 18th nakshatra or lunar mansion in Vedic astrology associated with the heart of the constellation Scorpii, and the stars α (Antares), σ, and τ . என்ற அறிய தகவலும் கிடைத்தது.

சங்க கால தமிழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மக்களும் கொண்டாடிய தெய்வம் இவள், கடைசியாக சோழர் காலம் வரை சிறப்புற்று இருந்த இந்த தெய்வத்தை, பிற்காலத்தில் நாம் தொலைத்து விட்டோம்.

ஆனால் இன்றும் பழங்கால கோயில்களில் பத்தோடு பதினொன்றாக தன்னுடைய மகன் மகளுடன் ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் வருவோருக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.

ஒருவேளை யார் கண்ணிலாவது பட்டாலும் அங்கே செல்லும் மக்களுக்கு இவள் யார் என்பது தெரியாது, இவளுக்கு இப்படி ஒரு நீண்ட நெடிய வராலாறு இருப்பதும் புரியாது.

பணம் தான் வாழ்கை என்றாகிவிட்ட காலத்தில் தவ்வை நமக்கெதற்கு? அவளின் தங்கை திருமகளே போதும் என்கிறீரா?

யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் இத்தனை அறிவியல் வரலாற்றையும் ஈராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்கை நெறியை நமக்கு கற்பித்த வள்ளுவனும் கூறிய தவ்வையை மறந்து விடாதீர்கள் தமிழர்களே...

பதிவு - Sasi Dharan

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.