16/12/2017

தமிழர் வரலாறு பகுதி - 2 ...


(மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

5. மாந்தன் பிறந்தகம்...

தென்னிலம்..

மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றியகருதுகோள்: "மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையைநெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக் கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல்உண்மைகள்) உள்ளன.

விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாகவுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா(Lemuria) எனப் பெயர் பெற்றது.

அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக்கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்."

"மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும்நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக்காட்டும்.

இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப் படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.

இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய "நிமிர்ந்த குரக்கு மாந்தன்" (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof. Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய 'நெற்றுடைப்பான்' (Nut cracker Man or sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர்.

உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப் பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.

'உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும்' பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், "இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது.

கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்"9 என்று கூறுகின்றார்.

தொன்னிலம்...

நிலவியல் வரலாற்றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், "கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது" என்பர்.

இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

நண்ணிலம்..

முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே.

நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க..

முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும்.

ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக.

வண்ணிலம்..

முதற்கால மாந்தன் காட்டு விலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே.

ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும்.

ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல்.

பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது.

நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும்.

அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது.

அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள.

பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந் தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகை களும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ?

முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது,

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்"
(புறம். 109)

என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்..

காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப்பட்டும்,

நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள்தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி (பச்சை), தட்டான் (தட்டை), கல், கரம்பை (வயல்), கொள் (காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன.

நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது.

காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள்.

இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத்தான் தெரியும்..

பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை.

இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர்.

கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை,

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்
காலை"

(சிலப்.11: 60-7)

என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க.

இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.