16/12/2017

பாஜக மோடிக்கு சாமானியன் கடிதம்...



அனுப்புநர்..

காரிக்கோட்டை
கிராமவாசி,
மன்னார்குடி(வ)
திருவாரூர் ( மா,வ)
தமிழ்நாடு
தென் இந்தியா

பெறுநர்..

மாண்புமிகு திரு.மோடி     
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.

பொருள் - தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக
எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்.

ஐயா வணக்கம்,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..

மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.

அந்த மூன்று கூட்டத்திலும் ,
"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன்.

மீட்டவுடன் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன் என்றீர்கள்.

அதையும் நூறே நாளில் தருவதாக பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள்.

உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள்.

பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள்.

நீங்கள் வாக்குத்தவறாத பிரம்மச்சாரி என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார்.

ஐயா ,

நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி , உங்கள் வாக்குறுதியை நம்பி பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன்.

வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை.

நூறுநாளில் தருவதாக, தங்கள் வாக்குறுதியை நம்பிக் கடன் வாங்கி விட்டேன்.

100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது.

ஐயா நீங்கள் மானஸ்தன்..

பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள்.

நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.

உங்கள் மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்.

உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை.

அதில் பல வங்கிகளும் அடக்கம்.

உங்கள் அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார்.

ஜி... விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல.

என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை.

அதன் மூலம் உங்கள் நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர்.

மொத்தம் நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே வாக்களிப்போம். இது உறுதி.

உடனடியாகக் கீழ்க்காணும் எனது
வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும்.

இது அவசர வேண்டுகோள் ஐயா.

நல்லவேளை நான் விவசாயி இல்லை..

பத்திரிகையாளன். இந்நேரம் கடனுக்காக என்  கை காலை முறித்திருப்பான்  வங்கி அடியாள்.

ஐயா..

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?

தயவுசெய்து உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது.

ஜெய்ஹிந்த்..

ஸ்வச் பாரத்...

ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...

இணைப்பு - தலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.

குறிப்பு - ஜி ... இதுகுறித்து ப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன்.

முக்கியக் குறிப்பு  - ஐயா இக்கடிதத்தைப் பகிரும் என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும் 15,00,000 செலுத்தவும்.

- நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.