18/01/2018

பெங்களூருவை சுற்றி உள்ள பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்தி வெளிவந்துள்ளதால் தமிழகத்திலும் அதன் தொடர்ச்சியாக தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது...


பெங்களூரில் உள்ள தாசரஹள்ளி பகுதியிலுள்ள கோழிக்கடைகளில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்து வந்துள்ளன. மர்மமான முறையில் கோழிகள் உயிரிழப்பதை அறிந்த கடையின் உரிமையாளர் கால்நடை நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

அதனையொட்டி கடைக்கு வந்த அதிகாரிகள் இறந்து போன கோழிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனுப்பப்பட்ட ஆய்வில் இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே இறந்த கோழிகளும் நோய் பாதித்த கோழிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. அதன் அடுத்தக் கட்டமாக அப்பகுதி வாசிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அரசு, பாரீசில் உள்ள உலக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அவர்களும் வந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது இது சாதாரண பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், அதிதீவிர H5N8 வகை வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் தெரியவந்தது.

இந்த அறிக்கை காரணமாக, பெங்களூரில் தற்சமயம் சிக்கன் விற்பனை குறைந்துள்ளது. மட்டன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக தமிழகம் கொண்டு செல்லப்படும் கோழிகளால் தமிழகத்திலும் பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதால், கர்நாடக அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.