03/02/2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...


ரயில் நிலையம், வங்கி அலுவலகம், பள்ளி, கல்லூரி, மென் பொருள் நிறுவனம், கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், என எங்கும் கடைநிலை ஊழியர் தொடங்கி இடைநிலை ஊழியர் அலுவல் பணியார்கள் வரை எங்கு பார்த்தாலும் வேற்று மாநிலத்தார்களே பணியில் இருக்கிறார்கள்.

மத்திய அரசு தொழில்களுக்கான தகுதி தேர்வுகளும் வட மாநிலத்தவர்களுக்கு சார்பாகவே இருக்கின்றது மேலும் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களும் வேற்று மாநிலத்தவர்களாகவே பெரும்பாலும் இருக்குறார்கள். கல்லூரி மேல் படிப்பு தொடங்கி வேலை வாய்ப்பு வரை மத்திய அரசின் தகுதி தேர்வுகளும் பணி அமர்வும் தமிழர்களை புறக்கனித்தே வருகிறது.

மத்திய அரசின் தொழில் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தான் இந்த அவலம் என்றால், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு வரம்பற்ற முறையில் அரசு வேலைகளில் வேற்று நாட்டவர்களை வேற்று மாநிலத்தவர்களை அமர்த்துகின்றது, தகுதித் தேர்விற்கான வினாக்கள் கூட வட-இந்தியர்களுக்கு எளிதான வினாக்களாகவே இருக்கின்றது. பணி நியமன முறை வெளிப்படைத் தன்மையற்று மறைமுகமாகவே இருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் சொந்த மாநிலத்திலேயே தமிழர்கள் இரண்டாம் நிலை குடிகளாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மராட்டிய மாநிலத்தில் மராத்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலும் வேற்று மாநில மக்களின் வரம்பற்ற ஊடுவலால் தங்கள் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் ஏற்பட்டதாலும் அந்த இடைவெளியை பாசிச இனவாதக் குழுக்கள் தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை மூட்டியது.

அதே போல கர்நாடகத்திலும் வேற்று மாநில மக்களின் ஊடுருவல் பெங்களூரில் அதிகரித்ததால் கன்னடர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டது, அதனால் கன்னடர்களுக்கும் வேற்று மாநில மக்களுக்கும் இடையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. கர்நாடக மாநில அரசு தனிச் சட்டம் இயற்றி தனியார் பணிகளுக்கும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது கன்னடர்களுக்கு முன்னுரிமை பெற்றுத் தந்தது.

இப்படி இருக்க, தமிழ் நாட்டிலோ படித்த தகுதி உள்ள தமிழ் இளைஞர்களே வேலை இன்றி தவித்து வரும் சூழலில் வேற்று மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தமிழர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

தமிழரின் பொருளியல் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு விடப்படும் சவால்.
தமிழ் நாட்டிலும் அனைத்து வேலை நியமனங்களிலும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் முன்னிரிமை வழங்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியானாலும் மாநில அரசுப் பணியானாலும் தனியார் வேலை வாய்ப்புகளானாலும் மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் அதில் தமிழர்களே பணி அமர்த்தப்பட வேண்டும், தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதம் செய்து பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, முதலியனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பு மற்று வேலைப் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனத்தின் மாநில அரசின் கடமை. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டியது தமிழ் நாடு அரசின் கடமை.

ஒன்றியமானது ஒரு தேசிய இனத்திற்கான வெளியை தர மறுத்தால் தன்னாட்சிக்கான அரசியல் புரட்சி அங்கு எழும் தனக்காக வெளியை அந்த இனம் உருவாக்கிக்கொள்ளும்!!

-அன்பு

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’
சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு.

நாள்: பிப்ரவரி 3, 2018
இடம்: அண்ணா அரங்கம், சென்னை
நேரம்: காலை 9 மணி - மாலை 8 மணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.