12/03/2018

ஆதாம் என்ற தமிழன் - ஒரு வரலாற்று ஆய்வு -1...


விவிலியம்… கிருத்துவர்களின் வேத நூல்..

இந்நூலில் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா? பார்ப்போம்…

விடையினைச் சுமந்துக் கொண்டு பழைய ஏற்பாடு இதோ நிற்கின்றது.

முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வோம்.

இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது.

உலகத்தின் வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும் ஒரு நூல்.

சரி இப்பொழுது நம் விசயத்துக்கு வருவோம்.

விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக் காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரி…

அந்த மனிதனை எங்கே படைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..

“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8).

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி.

அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கே இருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…

விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.

விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவே ‘கிழக்கு‘ என்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும்.

சரி… மத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?
இந்தியா, சீனம் மற்றும் சப்பான்.

இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம் உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.

அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.

அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும் ‘கிழக்கில் உள்ள இடம்‘ சிந்து சமவெளி என்று நாம் கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும் வரை).

சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.

ஒருவர்… ஆரியர்.

இன்னொருவர்… தமிழர்.

இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றே முடிவினைத் தருகின்றது.

இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.

நிறுத்துங்கள்… நிறுத்துங்கள்…

சிந்துசமவெளி என்கின்றீர்கள்… தமிழர்கள் என்கின்றீர்கள்…

சான்றுகள் போதவில்லையே… இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…

சரி… விவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?

ஆதாம் தானே..

அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம் பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

“அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவித காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20).

ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.

அதற்கு முன்னால் முதல் மனிதன் ‘மனிதன்‘ என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான்.

அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை.

ஒரு வேளை அது தொடர்பான செய்தி  இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம் (விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக் கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்க… தமிழ்..

ஆதி..

இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது?

ஆதி என்றால் தொடக்கம்.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறு அழைப்பீர்கள்?

ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..

‘ஆதி மனிதன்‘ … ‘ஆதன்‘ என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில் ‘ஆதாம்‘ என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு உண்டல்லவா?

ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களே பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்…

இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்..

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.

“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 ).

மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.

ஆனால் ஆங்கிலத்தில் ‘இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.

எபிரேயத்தில் ஏவாள் ‘ஆயா‘ என்றே குறிக்கப்படுகின்றாள்.

ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.

‘ஆயா‘ என்றச் சொல்லே மருவி ‘ஈயா‘ என்றும் ‘இவே‘ என்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவை இல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினை நாம் காண முடியும்.

எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.