17/07/2018

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சம் கன அடி நீர் திறப்பு...


கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் தமிழகத்துக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்), கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்புக் கருதி தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்ந்தது.

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 7-ஆவது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரங்களில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.