17/07/2018

நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?


தமிழருக்கு மொழிப்பற்று இல்லை என்போருக்கு இந்த பதிவு...

1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது.

1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது.

1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்).

1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது.

1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டு வந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா.ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார்.

1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன்.

1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.

1990களில் மின்னஞ்சல் காலம் தொடங்கியது.

1995ல் ஆஸ்திரேலியாவில் பாலா பிள்ளை என்பவர் முதல் தமிழ் இணையதள (மின்மடல்) குழுவை உருவாக்கினார்.

இன்று இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்று.

இது சில தனிப்பட்ட தமிழரின் முயற்சி.

இனி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செயல்பாட்டைப் பார்ப்போம்...

2000களில் கைபேசிகளின் காலம் தொடங்குகிறது.கைபேசிகளில் தமிழ் எழுத்துரு காட்டும் தொழில்நுட்பம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ்மக்களின் செயல்பாட்டை, முதன்முதலில் கைபேசிகளில் தமிழைக் கொண்டு வந்த ஓபரா நிறுவனத் தலைவர் அளித்த பேட்டியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்திய போது.. தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள்.

இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்க முடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை..

OBML என்ற வசதியை கொடுத்தோம்.

நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான். 

தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும்,
அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்..

அதாவது தமிழ்மொழி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.தமிழனம் தான் வாழ வழியில்லாமல் போய்விட்டது.

மொழியை வாழவைக்க இனம் வலிமையாக இருக்க வேண்டும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

1991ல் பிப்ரவரி 21ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஐ.நா அறிவித்தது.

இது எதனால் என்றால் 1952ல் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) உருது மொழித் திணிப்பை எதிர்த்து நடத்திய பெரிய போராட்டத்தில் பிப்ரவரி 21 அன்று 11 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால் தமிழினம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1939லேயே இரு மரணங்களையும்.. 1965ல் கிட்டத்தட்ட 300 மரணங்களையும் சந்தித்துள்ளது.

1982ல் கூட கர்நாடக மாநிலம் ஆக்கிரமித்துள்ள தமிழர் பகுதிகளில் தமிழ் கல்விக்காகப் போராடிய 19 தமிழர்கள் கர்நாடகா அரசால்  கொல்லப்பட்டனர்.

உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய முதல் இனம் தாய்மொழிக்காக இத்தனை உயிர் இழப்புகளை சந்தித்த முதல் இனம் நாம் தான்.

அதற்கான அங்கீகாரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் வங்காளியிடம் ஒரு நாடு இருந்தது. அதனால் ஐ.நா வரை குரல் எழுப்ப முடிகிறது.

இந்தியாவில் ஒட்டுக் குடித்தனம் போடும் நம்மால் என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.