18/09/2018

அமைச்சர் செல்லூர் ராஜு வீடு அருகே மறியல்: சாலை அமைக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்...


மதுரையில் சாலை வசதி கேட்டு, அமைச்சர் செல்லூர் கே. ராஜுவின் வீடு அருகே மறியல் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீடு, மதுரை செல்லூரில் உள்ளது. நேற்று காலை 38-வது வார்டு பகுதி மக்கள், வியாபாரிகள் திடீரென திரண்டு அமைச்சரின் வீட்டின் அருகே சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனப் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் மறியல் நடத்தியவர்கள் எந்த நேரத்திலும் அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து செல்லூர் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 38-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது: அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம்,மகாத்மா காந்திபுரம், சுயராஜ்யபுரம் பகுதி யில் சாலைகள் அமைக்க கற்களை பரப்பி உள்ளனர். ஆனால், இதுவரை சாலை அமைக்கவில்லை.

அதுபோல செல்லூர் மார்க்கெட் சாலையும் அமைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லை. பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்க நீண்ட நாளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

அதனால், மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க அமைச்சரின் வீட்டின் அருகே போராட்டம் நடத்தினோம் என்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.