18/11/2018

இலக்கியத்தில் தமிழர்நாடு...


கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?

தமிழ் :

தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58.

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50.

தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6.

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார், கொள்ளார் - பரிபாடல் 9.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.

தமிழர் :

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19. (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.

தமிழர்நாடு :

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51 (தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்க மாட்டானாம். தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்)

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63 (செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227 (தமிழகம் எனும் சொல்).

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த. - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு  - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை.

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்

- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை - மணிமேகலை (தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.