30/12/2018

யார் இந்த நம்மாழ்வார்..?


தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார்.

தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்த பின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டோமினிக் பியர் என்பவர் ஆரம்பித்த Island of Peace என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்யவது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.

கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960 ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆனார், முனைவர் கோ.நம்மாழ்வார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர். 

இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 

டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.

தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.

இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார்.

இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது. 

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.

ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால் தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்...

சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார். 

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறுதி நிமிடங்கள்...

டிசம்பர் 30 அன்று இரவு, நம்மாழ்வார் இயற்கை எய்தினார்..

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அதன் பிறகு கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் ஆங்கிலப் புத்தாண்டு அன்று காலை 4 மணிக்கு   எடுத்துச் செல்லப்பட்டு நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது...

அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.