09/02/2019

அருகம்புல்...


அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. அதன் தாவரவியல் பெயர்: சினோடன் டாக்டிலோன். அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.

மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.

ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

அருகுவே. புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்.. என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்..

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்...

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

அருகம்புல் - இஞ்சி ஜூஸ்...

தேவையான பொருட்கள்..

இளசான அருகம்புல் - ஒரு கட்டு
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்
தேன் - ஒரு கரண்டி 
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 1/2 சிட்டிகை

செய்முறை...

இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.

அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.