22/04/2017

டாஸ்மாக் கடையை திறக்க சொல்லி திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம்...


தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் கோபத்தை கண்ட தமிழக பாஜக என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்பதாக  ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்தது.

அதன்படி 18-ந்தேதி (18.04.2017) காலை 10:00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிராதான மதுக்கடைகள் முன்பாக பா.ஜ.கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டதை நடத்தும் என்று அறச்சீற்றம் கொண்டு தமிழிசை அறிக்கை வெளியிட்டார்.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றால் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள்  போடப்பட்டு, காக்கிகள் குவிக்கப்பட்டு பொது மக்களை பீதியூட்டுவது போன்றவை  சமீபத்திய நடைமுறையாகும்.

ஆனால் ஏப்ரல் 18 அன்று பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் அப்படிபட்ட பதட்டம் எதுவும் இல்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகில்  உள்ள டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் வித்தியாசமான நூதனப்போராட்டமாக இருந்தது.

பாஜக -வின் மாவட்டம், ஒன்றியம் என அனைத்தும் டாஸ்மாக் கடையை நோக்கி வந்து முழக்கமிட்டனர்.

இதில் சிலர் பாரத் மாதாக்கீ ஜே என்று அவ்வபோது ஈனஸ்வரத்தில் ஊளையிட்டனர். மாவட்டம், வட்டம், சதுரம், முக்கோணங்களின் சவடால்கள் கேட்கவே நாராசமாக இருந்தது.

முற்றுகைப் போராட்டம் இருப்பதால் கடை திறக்க வேண்டாம் முற்றுகை முடிந்த பின்னால் திறந்து கொள்ளலாம் என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததனால் 12:00 மணி கடந்தும் கடை திறக்கப்படவில்லை.

கடையை திறந்தால் தான் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்வோம், இல்லையேல் போராட்டம் நீடிக்கும் என காவிப்படை வானரத் தளபதிகள் கூறியதும் குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

அதாவது திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் பாஜக-வினர் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பிலும், தலைமைக்கும் அனுப்பி தமது இருப்பை பதிவு செய்ய முடியுமாம். என்ன இருந்தாலும் செல்ஃபி நாயகனைத் தலைவனாக கொண்ட கட்சியல்லவா...

இந்த அறிவிப்பு  காவல்பணிக்கு வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை  உருவாக்கிவிட்டது.

டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்தவர்கள் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அச்சப்பட்டு யோசித்து தயங்கியபடி நின்றனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.

இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தும் என்ற தமிழிசையின் பேச்சைக்கேட்டு, பா.ஜ.க-வை நம்பி போராட்டத்துக்கு வந்த மக்கள், பெண்கள் முகம் சுழித்தபடியே செய்வதறியாமல் கலைந்து சென்று கொண்டிருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.