13/09/2017

ஆழ்மன அற்புத சக்திகள்-16...


1990ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் 'நாற்பது நிமிடங்கள்' என்ற நிகழ்ச்சியில் காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டு சிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். தன்னை முன் பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான். பிபிசி செய்திக்குழு அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆராய்ச்சி செய்து விவரங்களைக் கண்டறிந்தது....

வட இந்தியாவைச் சேர்ந்த டிட்டு சிங் இரண்டரை வயதுள்ள போதே தன் முற்பிறவி நினைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனுடைய பெயர் சுரேஷ் வர்மா என்றும், மனைவி பெயர் உமா என்றும், இரண்டு பிள்ளைகள் அவனுக்கு இருப்பதாகவும் சொன்ன அவன் அவர்களுடைய பெயரையும் சொன்னான். ஆக்ராவில் அவன் வசித்ததாகவும் அவன் ரேடியோ, டிவி விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருந்ததாகவும் சொன்ன அவன் அதன் விலாசத்தையும் கூட சொன்னான். ஆரம்பித்தில் அவனை அவ்வளவாகப் பொருட்படுத்தாத பெற்றோர் நாளாவட்டத்தில் தங்கள் மூத்த மகனை எதற்கும் ஆக்ராவிற்குப் போய் விசாரிக்கும்படி சொன்னார்கள்.

டிட்டு சிங்கின் மூத்த சகோதரன் தன் தம்பி சொன்ன விலாசத்தைத் தேடிக் கண்டு பிடித்தான். நிஜமாகவே அங்கு அப்படி ஒரு டிவி, ரேடியோ கடை இருந்தது. உள்ளே சென்ற போது கல்லாவில் ஒரு விதவைப் பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் பெயர் உமா என்றறிந்த போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களா, அவருடைய கணவர் பெயர் சுரேஷ் வர்மாவா என்று கேட்க அந்தப் பெண்மணி ஆம் என்று சொன்னார். கடைசியில் தன் தம்பி சொன்னதையெல்லாம் சொல்ல அந்தப் பெண்மணியும் அதிர்ச்சி அடைந்தார். டிட்டு சிங் சொன்னது போல தன் கணவர் துப்பாக்கியால் தான் சுடப்பட்டு இறந்தார் என்பதையும் தெரிவித்தார்.

மறுநாளே உமா டிட்டுசிங்கைப் பார்க்க தானே பயணம் செய்தார். டிட்டு சிங் உமாவை சரியாக அடையாளம் கண்டு பிடித்ததோடு வேறு சில தகவல்களும் சொன்னான். அவையும் சரியாக இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து டிட்டுசிங் ஆக்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். பல பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த முற்பிறவியின் குழந்தைகளை அடையாளம் சொன்னான். கடைக்குச் சென்று தன் மரணத்திற்குப் பின் செய்த மாறுதல்களை சரியாகச் சொன்னான். தன்னைக் கொன்றவர்கள் பெயர் எப்படி சுட்டார்கள் எங்கு சுட்டார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.

பிபிசி குழு ஆக்ரா காவல் நிலையத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பார்த்த போது அதெல்லாம் டிட்டுசிங் சொன்னதற்கிணங்கவே இருந்தன. பிபிசி குழுவின் காமிரா அந்த ரிபோர்ட்டுகளைப் படம்பிடித்துக் காட்டியதோடு டிட்டு சிங்கின் மழித்த தலையையும் காட்டியது. சுரேஷ் வர்மாவின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அதே இடத்தில் டிட்டு சிங்கின் தலையில் ஒரு மச்சம் இருந்ததைக் காட்டினார்கள்.

ஆச்சரியமாக உள்ளதள்ளவா? பூர்வ ஜென்மம் பற்றிய நம்பிக்கை இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்களில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவ மதத்திலும் பண்டைய காலத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதை ஆதார பூர்வமாக டாக்டர் ப்ரையன் வெய்ஸ் என்ற அமெரிக்க மனோதத்துவ நிபுணர் சுட்டிக் காட்டுகிறார். ரோமானியப் பேரரசர் கான்ஸ்டண்டைனும் அவர் தாய் ஹெலெனாவும் தங்கள் காலத்தில் மறுபிறவிகள் குறித்து பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் அழிக்கச் செய்தார்கள் என்று கூறுகிறார். பல பிறவிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மோட்சம் பெற பல காலம் இருக்கிறது என்ற அசட்டையை மக்களிடையே ஏற்படுத்தும், அது சர்ச்சை பலவீனப்படுத்தும் என்ற எண்ணமே அதற்குக் காரனம் என்கிறார் அவர்.

டாக்டர் ப்ரையன் வெய்ஸ் ஆழ்மன சக்திகளை நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். அவருடைய ஆராய்ச்சிகளில் மனிதர்களின் முந்தைய பிறவிகள் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் இது போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு மனோதத்துவ மருத்துவராக இருந்தார். ஆன்மீகம், அபூர்வ சக்திகள் ஆகியவற்றிலோ, மறுபிறப்பிலோ நம்பிக்கை இல்லாத அவரை அடியோடு மாற்றியது அவரிடம் 1980ஆம் ஆண்டு சிகிச்சை பெற வந்த காதரின் என்ற பெண்மணி தான்.

அவரிடம் 18 மாதங்கள் வந்து சிகிச்சை பெற்றும் காதரீன் குணமடையாமல் போனது ப்ரையன் வெய்ஸை குழப்பியது. வழக்கமான எல்லா உளவியல் மருத்துவ முறைகளையும் பயன்படுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போகவே ஒரு நாள் காதரினை ஹிப்னாடிசம் செய்து "உனக்கு இந்த உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் ஆரம்பமான அந்தக் காலத்திற்கு செல்" என்று கட்டளையிட்டார்.

காதரின் தன் குழந்தைப்பருவத்திற்குச் சென்று அந்த நிகழ்ச்சிகளை வர்ணிப்பாள் என்று நம்பிய வெய்ஸ் ஏமாந்து போனார். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று தன் முந்தைய பிறவிகளைப் பற்றி அவள் சொல்ல ஆரம்பித்த போது அவர் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார். அவள் நடிகை அல்ல, பலவித ஆளுமைகளை உடைய பெண்மணியுமல்ல என்று ஆராய்ந்தறிந்த வெய்ஸ் அவளுடைய முந்தைய பிறவித் தகவல்களை ஆராய முனைந்தார். சரிபார்க்க முடிந்த ஒரு சில விவரங்கள் உண்மையென்று தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தகவல்களை வைத்துக் கொண்டு காதரினை அவரால் குணப்படுத்தவும் முடிந்தது.

அந்தப் பெண்மணி காதரினை மையமாக வைத்து 1988ல் "பல வாழ்க்கைகள், பல ஆசான்கள்" (Many Lives, Many Masters) புத்தகத்தை ப்ரையன் வெய்ஸ் எழுதி அது மிகவும் பிரபலமடைந்தது. அவர் அதே போல் வேறு பல புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் 1980ல் இருந்து சிகிச்சை செய்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் உளவியல் பிரச்னைகளுக்கான காரணங்கள் முற்பிறவிகளில் இருந்ததாகக் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்திலேயே சில துறைகளில் அபார ஞானம் படைத்த சில அதிசயக் குழந்தைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட ஞானமெல்லம் அவர்கள் முற்பிறவியில் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதே ப்ரையன் வெய்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது வரை அபூர்வமான சக்திகள் படைத்த தனி மனிதர்களைப் பற்றி கண்டோம். இது போல் இன்னும் ஏராளமான உதாரணங்களை ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த மனிதர்களின் வெளிப்படுத்தும் சக்தி வகைகள் நாம் இது வரை கண்ட சக்திகளின் தனி அல்லது கூட்டு வகைகளாகவே இருக்கக் கூடியவை என்பதால் அந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி மனோசக்தி பற்றிய பொதுவான சுவாரசியமான ஆராய்ச்சிகளைப் பற்றியும், அந்த சக்திகளை நமக்குள் அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போமா?

மேலும் பயணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.