04/04/2018

காவிரி விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை...


காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பல விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், இந்த விசயத்தில் ஒரு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறியிருப்பதாவது...

நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.

ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.

இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.

இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.